ஓம் நமசிவாய

ஏழாம் தந்திரம் - 37. கேடுகண்டிரங்கல்

பதிகங்கள்

Photo

இன்பத்து ளேபிறந் தின்பத்தி லேவளர்ந்
தின்பத்து ளேதிளைக் கின்ற திதுமறந்து
துன்பத்து ளேசிலர் சோறொடு கூறையென்
துன்பத்து ளேநின்று தூங்குகின் றார்களே.

English Meaning:
They Pursue not the Way of Bliss

Born in bliss, grown in bliss
Steeped in thoughts of bliss
This way, they forget;
Instead,
Hankering after food and raiment
In sorrow steeped they are;
And in sorrow steeped, they insensible slumber.
Tamil Meaning:
மக்கள் யாவரும் பிறக்கும்பொழுதே இன்பத்தில் பிறந்து, வளரும் பொழுதும் இன்பத்திலே வளர்ந்து இன்பத்திலே திளைக்கின்றவர்களே யாயினும் சிலர் இதனையறியாது தாங்கள் துன்பத்திலே மூழ்கியிருப்பதாகக் கருதிக்கொண்டு அத்துன்பத்தைப் போக்கிக் கொள்ளும் வழியாக, `உணவு` என்றும், `உடை` என்றும் அவாவி, அவற்றைப் பெறவேண்டி அல்லற்பட்டு, அவ்வல்லலை விட்டு நீங்க நினையாமல் அதிலேயே செயலற்றிருக்கின்றார்கள்; இஃது இரங்கத் தக்கது.
Special Remark:
`வீடேயன்றிப் பந்தமும் இறைவனால் தரப்படுவதே யாகலின் அந்தப் பந்தம் பின் வீடு பெறுதற்கு வழியாகும் என்பதே உண்மையாதலின், அவ்வுண்மையை உணர்வார்க்குப் பந்தமும் இன்ப முடையதாயே அமைதல் பற்றி, `இன்பத்துளே பிறந்து, இன்பத்திலே வளர்ந்து, இன்பத்துளே திளைத்து`` எனவும், இவ்வுண்மையை உணராமையாலேதான் வாழ்க்கை துன்ப மயமாகின்றது என்பது பற்றி, ``சோறொடு கூறையென் துன்பத்துளே நின்று`` எனவும், இவ் வறி யாமையுடையார்க்கு அவர் கருத்தாலும், செயலாலும் உண்டாக்கிக் கொள்கின்ற துன்பத்தினின்றும் நீங்கும் வாயில் இல்லாமைபற்றி, ``தூங்குகின்றார்களே` என்றும் கூறினார். `அனைத்தும் திருவருட் செய லாதலின் அவை இன்பமயமேயாம். ஆயினும் அவற்றை அவ்வாறு உணராதார்க்கு அவை அனைத்தும் துன்பமேயாம்` என்பது கருத்து.
``பந்தமும் வீடும் படைப்போன் காண்க``
-தி.8 திருவண்டப் பகுதி, அடி, 52
என்பது முதலிய திருமொழிகளால், வீடேயன்றிப் பந்தமும் இறைவனால் தரப்படுவதேயாதல் விளங்கும். மற்றும் இதுபற்றிய விளக்கங்கள் சாத்திரங்களில் பெறப்படும். இங்குக் கூறப்பட்ட இம்மக்களை நோக்கியே,
பால்ஆழி மீன் ஆளும் பான்மைத்(து) அருள் உயிர்கள்
மால்ஆழி ஆளும் மறித்து. -திருவருட்பயன், 34
எனச் சாத்திரத்தில் கூறப்பட்டது. உண்மையுணர்வார்க்கு, ``பெற்றசிற் றின்பமே பேரின்பமாம்`` (திருவுந்தியார், 53) என்றது அறிக. துன்புறுவோர் பலராயினும் ``சிலர்`` என்றது, அவர்தம் அறியாமையது சிறுமை பற்றி வந்த இழித்தற் குறிப்பு.
இதனால், உண்மையுணர மாட்டாத அறியாமை நோக்கி இரங்கியவாறு.