ஓம் நமசிவாய

நான்காம் தந்திரம் - 9. ஏரொளிச் சக்கரம்

பதிகங்கள்

Photo

விந்துவும் நாதமும் ஒக்க விழுந்திடில்
விந்துவும் நாதமும் ஒக்க விதையதாம்
விந்திற் குறைந்திட்டு நாதம் எழுந்திடில்
விந்துவை எண்மடி கொண்டது வீசமே.

English Meaning:
Bindu and Nada Produce Bija

If Bindu and Nada in equal proportions arise,
Bindu and Nada together produced Bija (Seed) Balanced,
If Bindu rises more and Nada less,
The Bija becomes potent far,
Eight times more than Bindu.
Tamil Meaning:
`ஏரொளிச் சக்கரம் எல்லா உலகங்களையும் அடக்கி நிற்கும்` என்பது விளக்குதற்கு இது முதல் நான்கு மந்திரங்களால் உலக உற்பத்தி முறையை உணர்த்துகின்றார்.
`விந்து, நாதம்` என்ற இரண்டு தத்துவங்கள் உலகிற்கு அடி நிலையாய் உள்ளன. அவை யிரண்டும் முதற்கண் நிற்றல் போலத் தனித்து நில்லாது சமமாய்க் கலந்து கீழ்வருமாயின், அங்ஙனம் கலந்த அக்கலப்பே உலகத்திற்கு முதலாய் நிற்கும். பின்பு விந்து மிகுதியாக நாதம் குறைந்து நிற்க வேண்டில், அங்ஙனம் நிற்றற்கும் நாதத்தினும் விந்துவை எண்மடங்கு மிகுதியாகக் கொண்ட ஒருநிலை முதலாக அமையும்.
Special Remark:
ஒப்பற்ற தனிப்பெரும் பொருளாகிய சிவம் உலகத்தை எண்ணாது இயல்யாய் நிற்கும் நிலையில் `சிவம்` என்னும் ஒரு பொருளேயாய் நிற்கும். பின் அது உலகத்தைத் தோற்றுவிக்க எண்ணும் பொழுது` தானும், தன் சக்தியும்` என இருகூறுபட்டு நிற்கும். அவ் இரு கூற்றுள் சிவத்திற்கும், சத்திக்கும் முறையே `நாதம், விந்து` என்பனவும் பெயராம். ஆகவே, நாதத்தினின்றே விந்து தோன்றுவ தாம். அத் தோற்றத்தின்கண் நாதமும், விந்துவும் முறையே தனித்தனி நின்று, பின் இரண்டும் சமமாய்க் கூடி நிற்கும். அந்நிலைக்குச் `சதாசிவம்` அல்லது `சாதாக்கியம்` என்பது பெயர். பின்னர், விந்துக் கூறு மிகுதியாக நாதக் கூறு குறைந்த ஒரு நிலை உளதாம். அதற்கு, `ஈசுரம்` அல்லது `மகேசுரம்` என்பது பெயர். அம் மகேசுரத்திலிருந்து விந்து குறைய நாதம் மிகுந்த ஒரு நிலை தோன்றும். அதற்கு `வித்தை` என்பது பெயர். இங்ஙனம் `நாதம், விந்து, சாதாக்கியம், மகேசுரம், வித்தை` என்னும் ஐந்து நிலைகள் அமைந்த பின்னரே, உலகம் பலப் பல வகையில் வியத்தகத் தோன்றுவனவாம். ஆகவே, அவ் அனைத்துத் தோற்றங்கட்கும் முதலாய் அமையும் ஐந்து நிலைகளையே இம்மந்திரத்திற் கூறினார் என்க.
``ஒக்க விழுந்திடில்`` என்றதனால் அவை இரண்டும் முன்னர்த் தனித் தனி நின்றமை பெற்றாம். ``எழுந்திடில்`` என்பது `எழுந்திடல் வேண்டுமாயின்` எனப் பொருள் தந்தது. ``எண்மடி`` என்றது, மிகுதி கூறியவாறு. மூன்று, நான்காம் அடிகள் முறையே வித்தை மகேச்சுரங்களைக் குறித்தமையும், ஐந்து நிலைகளையும் சொற் பல்காது செய்யுட்கேற்பச் சுருங்கி வர ஓதி முடித்தமையும் அறிக. விந்துவை முற்கூறியது ஒடுக்க முறைபற்றி. `விதை, வீசம், (பீசம்) என்னும் பொருட்சொற்கள் `முதனிலை` என்னும் பொருளவாய் நின்றன. இங்கும் இனி வருகின்றவற்றுள்ளும், `விதை` என்னும் இடங்களில் எல்லாம் `விரை` என்றே பாடம் ஓதுவாரும் உளர்.
இதனால், உலகத்திற்கு முதல் முதனிலையாகிய ஐந்து பொருள்கள் கூறப்பட்டன. இவை ஐந்தும் இறைவனாகிய சிவ னுக்கும், அவனுக்கு அவ்வந் நிலைகளில் இடமாய் நிற்கும் சுத்த மாயையின் விரிவுகட்கும் பொது என உணர்க. நாத விந்து நிலை வேறு பாட்டிற்குக் காரணம் முறையே சிவனது சத்தியின் `ஞானம், கிரியை` என்னும் வேறுபாடேயாம். உலகில் ஆண் பெண் கூறுகளாய சுக்கில சோணிதங்களையும் `விந்து, நாதம்` என்னும் பெயர்களால் கூறுப. ஆதலின் இம்மந்திரம் கருவுற்பத்தியாகிய வேறொரு பொருளையும் நயம்படக் தோற்றுவித்து இப்பொருட்குப் பின்னிரண்டடிகள் கருவுற்பத்திக்குச் சோணிதம் குறைதல் நலமாதலைக் குறிக்கும்.