ஓம் நமசிவாய

நான்காம் தந்திரம் - 9. ஏரொளிச் சக்கரம்

பதிகங்கள்

Photo

சொல்லிய விந்துவும் ஈராறு நாதமாம்
சொல்லிடும் அப்பதி அவ்வெழுத் தாவன
சொல்லிடு நூறொடு நாற்பத்து நால்உருச்
சொல்லிடு சக்கர மாய்வரும் ஞாலமே.

English Meaning:
How Chakra is Formed

Bindu aforesaid with Nadas twelve,
In the four petals of that Adhara stand as Letters respective
Chant Letters a hundred and forty four times,
They as Chakra form and lofty arise.
Tamil Meaning:
``விந்துவினால் எழும் நாதம்`` என்புழிச் சொல்லப் பட்ட சுத்த மாயை வாக்காக விருத்திப்படுமிடத்துப் பன்னிரு பிராசாத கலைகளாயும் விருத்திப்படுவதாம். அக்கலைகளே சிவமாயும் விளங்கும். அவைகளை, நூற்று நாற்பத்து நான்கு அறைகளில் அமைக்க, மேற்கூறிய ஏரொளிச் சக்கரம் தோன்றுவதாம்.
Special Remark:
நாதம் - வாக்கு. அதன் கலைகளையும் நாதம் என்னும் பெயராற் கூறினார். ``எழுத்து`` என்றதும் அதனை. பிராசாத கலைகள் முன்னைத் தந்திரத்தில் சொல்லப்பட்டன. `அவ்வெழுத்து அப் பதியாவன` என மாறிக் கூட்டுக. `பதியும்` என்னும் சிறப்பும்மை தொகுத்தலாயிற்று. சிவசத்தியால் நேரே இயக்கப்படுதலால், `சிவமும் ஆவன` என்றார். நூற்று நாற்பது அறைகள் அமையுமாறு பின்னர்க் காட்டப்படும்.
இதனால், ஏரொளிச் சக்கரத்தின் வடிவு பொதுமையிற் கூறி, அது திருவருளைப் பெறுதற்கு வாயிலாதற் சிறப்புக் கூறப்பட்டது.