ஓம் நமசிவாய

நான்காம் தந்திரம் - 9. ஏரொளிச் சக்கரம்

பதிகங்கள்

Photo

ஏரொளி உள்எழு தாமரை நாலிதழ்
ஏரொளி விந்துவி னால்எழும் நாதமாம்
ஏரொளி அக்கலை எங்கும் நிறைந்தபின்
ஏரொளிச் சக்கரம் அந்நடு வன்னியே.

English Meaning:
From Nada In Muladhara Rises Eroli Chakra

In Muladhara Lotus of petals four,
Are Nadas four
With radiant Bindu arise;
When Nada`s radiant Kala everywhere suffuses,
Then does arise of Supreme Light Chakra
In Central Kundalini Fire.
Tamil Meaning:
தன்னுள்ளே ஏரொளி எழப்பெறுவதாகிய தாமரை மலர் நான்கிதழ்களை யுடையது. அவ் ஏரொளியாவது, சுத்த மாயையினின்றும் தோன்றும் வாக்கேயாம். அவ்வொளி பல கூறுகளாய் வளர்ந்து உடம்பெங்கும் குறைவின்றி நிறையப் பெற்ற பின், உடலாகிய சக்கரம் (யந்திரம்) ஏரொளிச் சக்கரமாய்விடும். அப்பொழுது ஐம்பூதங்களில் ஒளிப் பொருளாகிய தீ, அச்சக்கரத்தின் நடுவிலே அணையாது நின்று ஒளிர்வதாம்.
Special Remark:
`எழப்பெறுவதாகிய தாமரை` எனவே, `அதுவே ஏரொளி தோன்றுவதாகிய முதலிடம்` என்பது பெறப்பட்டது. இது `மூலாதாரம்` என்பதும், இதன் இயல்பும் முன்னையதிகாரத்தில் விளக்கப்பட்டன. இவற்றைத் தோற்றுவாய் செய்யவே, `பிற ஆதாரங்களின் இயல்பையும் ஈண்டு நினைவு கூர்க` என்றதாயிற்று. விந்துவினால் - `விந்து` என்னும் காரணப் பொருளால், `அவ் ஏரொளிக் கலை`எனச் சுட்டினை மாற்றி யுரைக்க. ``எங்கும்`` என்றது, `உடலெங்கும்` என்னும் பொருளதே யாதலின், `ஏரொளிச் சக்கரமாய் அமைவது உடம்பே` என்பதுபோந்தது. போதரவே, அஃது அங்ஙனம் அமையுமாற்றைப் புறத்துக் கண்டு வழிபடும் முறை இனி இங்குக் கூறப்படுவது என்பது விளங்கும். ``அந்நடு`` என்றது `அதன் நடு` என்றவாறு. `உடலாகிய சக்கரத்தின் நடுவே தீ நிற்கும்` எனவே, `புறத்து வரையப்படும் சக்கரத்தின் நடுவில் அக்கினிக்குரிய `ஹ்ரூம்` என்னும் பீசாக்கரம் அடைக்கப்படும் என்பது புலனாம்.
இதனால், இவ்வதிகாரப் பொருள்கட்குத் தோற்றுவாய் செய்யப்பட்டன.