ஓம் நமசிவாய

மூன்றாம் தந்திரம் - 14. கால சக்கரம்

பதிகங்கள்

Photo

நாடவல் லார்க்கு நமனில்லை கேடில்லை
நாடவல் லார்கள் நரபதி யாய்நிற்பர்
தேடவல் லார்கள் தெரிந்த பொருளிது
கூடவல் லார்கட்குக் கூறலு மாமே. 

English Meaning:
Fruits of Seeking

They who seek
Know death none; evil none;
They who seek
Will become lords of earth;
They who seek
But know this true;
And well may it be told
To those that aspire.
Tamil Meaning:
மேற்கூறிய உண்மையை ஓர்ந்துணர வல்லவர்க்குக் காலத் தாக்கு இல்லை. ஆகவே, அவர்கட்கு இறப்பும் இல்லை. அவர்கள் மக்கள் வடிவில் காணப்படுகின்ற கடவுளாய் விளங்குவர். நூல்களின் முடிந்த பொருளைத் தேடிக் கண்டவர்கள் கண்ட பொருள் இதுவே. இதனைப் பெறவல்ல ஆற்றல் உடையவர்கட்கே இஃது உணர்த்தத் தகும்.
Special Remark:
காலத்தை அதற்குரிய நமன்மேல் வைத்துக் கூறினார். நமனது தாக்குதலை ``நமன்`` என்றது ஆகுபெயர். நரபதி - நரனாகிய பதி. அறிவும், காதலும் இல்லாதார்க்குக் கூறின், அங்கணத்துள் உக்க அமிழ்துபோலப் 1 பயனில் சொல்லாய் முடியும் ஆதலின், `கூட வல்லார்கட்குக் கூறலும் ஆம்` என்றார். உம்மை, `சிந்திப்பித்தலும், தெளிவித்தலும் ஆம்` என எதிரது தழுவிற்று.
இதனால், கழியாத அப்பொருள் காணவல்ல முயற்சியை உடையார் பெறும் பயன் கூறப்பட்டது.