ஓம் நமசிவாய

மூன்றாம் தந்திரம் - 14. கால சக்கரம்

பதிகங்கள்

Photo

ஓவிய மான உணர்வை அறிமின்கள்
பாவிகள் இத்தின் பயனறி வாரில்லை;
தீவினை யாம்உடல் மண்டலம் மூன்றுக்கும்
பூவில் இருந்திடும் புண்ணியத் தண்டே. 

English Meaning:
Importance of Sushumna in Yoga

Know thou the Consciousness that is Perfection;
The sinners know not its goodness;
This body no doubt is evil Karma`s product;
yet it holds the stalk (Sushumna) of the sacred Lotus
That blossoms in the Mystic Regions Three within.
Tamil Meaning:
ஓவியம்போல உணர்வு அலைவற நிற்றற்குரிய வழியை அறியுங்கள். இவ்வுணர்வினால் காலத்தை வெல்வதாகிய பயன் விளைதலை முன்னை நல்வினை இல்லாதோர் அறியமாட்டார்; (அதனால் அவர் வேறு உபாயங்களைத் தேடி அலைவர்.) இனி அவ்வழியாவது, பந்தமாய் நிற்கும் வினை காரணமாக வந்த இவ்வுடலில் உள்ள சூரிய சந்திர அக்கினி மண்டலங்கள் மூன்றிற்கும் ஓர் இணைப்பாகப் பல தாமரை மலர்களில் ஊடுருவி நிற்கும், யோகத்திற்கு ஏதுவாகிய தண்டேயாம்.
Special Remark:
`அதன்வழி உணர்வைச் செலுத்தி நில்லுங்கள்` என்பது குறிப்பெச்சம். பின்னிரண்டடிகளால் குறிக்கப்பட்டது சுழுமுனை நாடி. `யோகம் செய்யாத உடலால் பயனில்லை` என்றற்கு, `தீவினையாம் உடல்` என்றும், அதனைப் பயன்படச் செய்வது `சுழுமுனை` என்பார், ``புண்ணியத் தண்டு`` என்றும் கூறினார்.
இதனால், `காலத்தின், வாதனையைக் கடத்தற்கு யோக நெறியால் உணர்வொன்றியிருத்தலே சிறந்த உபாயம்` என்பது கூறப்பட்டது.