ஓம் நமசிவாய

மூன்றாம் தந்திரம் - 14. கால சக்கரம்

பதிகங்கள்

Photo

கூத்தன் குறியிற் குணம்பல கண்டவர்
சாத்திரந் தன்னைத் தலைப்பெய்து நிற்பர்கள்
பார்த்திருந் துள்ளே அனுபோகம் நோக்கிடில்
ஆத்தனு மாகி அமர்ந்திடும் ஒன்றே. 

English Meaning:
Seek the Dancing Lord as God and Become One With Him

They who sought the Dancer as their goal
Gained many things good;
And so stood in the path of the holy scriptures;
Seeking Him within and experiencing His presence
In eagerness they sit
And one with Siva become.
Tamil Meaning:
புறத்தில் சிவபெருமானது திருவுருவில் உண்மைகள் பலவற்றை உணர்ந்தவர், நூலுணர்வாகிய அபர ஞானத்தைப் பெற்றவராவர். அகத்தில் அவனைக் கண்டு, அதனால் விளையும் பயன்களை உணரின், அப்பெருமான் அங்ஙனம் உணர் பவர்க்கு உறவாயும் வேறாய் நில்லாது ஒன்றாயும் உடன் இருப்பான்.
Special Remark:
`அதனால், அவ்வநுபவம் பெற்றவர்களும் அவனைப் போலவே காலத்தைக் கடந்து நிற்பர்` என்பது கருத்து. பின்னர் ``உள்ளே`` என்றலால், முன்னர், `வெளியே` என்பது பெறப்பட்டது. குறி - வடிவம். ``குறிகளும் அடையாளமும் கோயிலும்`` என்ற ருளியது காண்க. வடமொழியில் `இலிங்கம்` எனப்படுதலையும் நினைக. குணம் - தன்மை; உண்மை. அவை ``தோற்றம் துடியதனில், தோயும் திதி அமைப்பில்`` (தி.5 ப.90 பா.6) என்றாற்போல்வன. `அகம்` என்றது ஆதார நிராதாரமீதானங்களை. அங்குப் பார்த் திருத்தல் பாவனையினாலாம். `பாவனை` என்பது பொய்யன்று என்பதற்கு, `அனு போகம்` என்றார். ``அனுபோகம் நோக்கிடில்`` எனவே `பார்த் திருப்பின், அனுபோகம் விளையும்` என்பது பெறப்பட்டது. அநுபவங் காரணமாகச் சமாதியில் நீங்காது நிற்றல் கூடுமாகலின், நோக்கிடில் `ஆத்தனும் ஒன்றாய் அமர்ந்திடும்` என்றார். ``ஆத்தன்`` என்றது, கூத்தனைச் சுட்டும் அளவாய் நின்றது. `ஆத்தனும்` என்ற உம்மை `அங்ஙனம் நோக்குவோனுக்கு இயைய` என இறந்தது தழுவிற்று. `ஆத்தனும் ஒன்றேயாகி அமர்ந்திடும்` என மாறிக் கூட்டுக. `யோகத்தாலன்றி ஏனைச் சரியை கிரியா மார்க்கங்களால் காலத்தைக் கடந்து நிற்றல் அரிது` என்றற்கு, அவற்றின் பயனை இங்கு எடுத்துக் கூறினார்.
இதனால், ``யோகம் மேற்கூறிய வகையில் உபாயமாதல் இவ்வாறு` என்பது கூறப்பட்டது.