ஓம் நமசிவாய

மூன்றாம் தந்திரம் - 14. கால சக்கரம்

பதிகங்கள்

Photo

விதித்த இருபத்தெட் டொடுமூன் றறையாகத்
தொகுத்தறி முப்பத்து மூன்று தொகுமின்
பதித்தறி பத்தெட்டும் பாரா திகள்நால்
உதித்தறி மூன்றிரண் டொன்றின் முறையே. 

English Meaning:
Vision of the Three Mandalas

On the twenty-eighth day
You gain the vision of Mandalas Three, each apart
On the thirty-third day
You gain their collective vision;
Do Centre your thoughts further
And vision the tattvas twenty and four
That to Earth and the rest of elements in order below.
Tamil Meaning:
யோகத்தில் நிற்க விரும்புகின்ற நீ! தத்துவங்களைச் சுருக்கி எண்ண வேண்டின், அசுத்த தத்துவங்களில் மூன்று நீங்கலாக ஏனைய இருபத்தெட்டோடு, சுத்த தத்துவம் ஐந்தனையும் அங்ஙனமே கொண்டு, ``தத்துவம் முப்பத்து மூன்று`` என வைத்துக்கொள். இனி அத்தத்துவங்களில் இந்திரியம் பத்து சூக்கும தேகமாய் உள்ள எட்டு இவைகளையும் நிலம் முதலிய பஞ்ச பூதங்களில் அடங்கி நிற்பன வாகவே பாவித்துக்கொள். இனி நிலம் முதலிய அப் பூதங்கள் ஐந்தும் ஒன்றின் ஒன்று - அஃதாவது, ஐந்தாவது பூதமாகிய நிலம் நான்காவது பூதமாகிய நீரிலும், நான்காவது பூதமாகிய நீர் மூன்றாவது பூதமாகிய தீயிலும் இவ்வாறு முறையே தோன்றின என்பதை உணர்.
Special Remark:
நீக்கப்படுகின்ற தத்துவங்கள் ``பிரகிருதி, புருடன், மாயை`` என்க. என்னை? அவை தனி தத்துவமாதற் சிறப்பில ஆதலின். அறை - அறுக்கப்படுவன; அஃதாவது குறைக்கப்படுவன. ``மூன்று அறையாக இருபத்தெட்டொடு`` என மாறுக. ``இருபத் தெட்டொடு`` என்றது, இருபத்தெட்டு உளப்பட என்றவாறு. இருபத் தெட்டு உளப்பட முப்பத்து மூன்று எனவே, சுத்தத் தத்துவங்களில் ஒன்றையும் குறையாது ஐந்தையும் கொள்ளல் வேண்டும் என்பது விளங்கிற்று. ``தொகுமின்`` என்றது, ஒருமை, பன்மை மயக்கம். ``பத்து எட்டும் பாராதிகளில் பதித்து அறி`` என்க. எட்டு; தன்மாத்திரை ஐந்தும், ``மனம், அகங்காரம், புத்தி`` என்னும் அந்தக் கரணம் மூன்றுமாம். சித்தம் பிரகிருதியாய் ஒழியும். பத்து எட்டுப் பாரா திகளில் அடங்கவே, ஆன்ம தத்துவம் அனைத்தும் பஞ்ச பூதங்கள் அளவாய் நிற்றல் விளங்கும். இக்கருத்துப் பற்றியே, நாம் காணும் உலகம், ``பஞ்சபூத பரிணாமம்`` என்றே சொல்லப்படுகின்றது.
``நிலந்தீ நீர்வளி விசும்போ டைந்தும்
கலந்த மயக்கம் உலக மாதலின்`` -தொல். மரபியல்
என்றார் தொல்காப்பியனாரும். மற்றும் திருமுறைகளிலும் பிற இடங்களிலும் உலகம் முழுவதும் பஞ்ச பூத பரிணாமம் என்னும் கருத்தே பெரும்பான்மையாகக் காணப்படுதல் தெளிவு. நான்கு முதலியன அவ்வவ் எண்ணு முறைக்கண் நின்ற பூதங்களை உணர்த்தின. `உதித்தது` என்னும் தொழிற் பெயர் இடைக்குறைந்து நின்றது. ``உதித்தது அறி`` என்பதனை இறுதிக்கண் கூட்டி, ``அப் பாராதிகள் உதித்தது அறி`` என எடுத்துக்கொண்டு முடிக்க. என்னை? ஏனைய எல்லாவற்றையும் பாராதிகளில் அடக்கவே, பின்னர் அறியற்பாலன அப் பாராதிகளே யாதலின். பூதங்களின் தோற்ற முறையை அறிதலால், அவற்றைக் கடக்குமாறு புலனாகும். ``தத்துவங்களை இவ்வாறு அறிக`` என்றது, மேற்கூறியவாறு காலத்தை அவற்றிற்கு அதிதேவர்க்கு உரிய பகுதிகளாக வைத்து அவ்வப்பொழுது அவரவரைத் தியானித்து அக்காலங்களால் வாதிக்கப்படாமல் இருத்தற்காம்.
இதனால், `காலத்தை யோகத்திற்கு உரிய வகையில் பகுத்துணர்கின்ற யோகி, அவற்றைக் கடத்தற்குத் தத்துவங்களின் முறைமையையும் உணர்தல் வேண்டும்` என்பது கூறப்பட்டது.