ஓம் நமசிவாய

மூன்றாம் தந்திரம் - 14. கால சக்கரம்

பதிகங்கள்

Photo

உகங்கோடி கண்டும் ஒசிவற நின்று
அகங்கோடி கண்டுள் அயலறக் காண்பர்கள்
சிவங்கோடி விட்டுச் செறிய இருந்தங்
குகங்கோடி கண்டங் குயருறு வாரே. 

English Meaning:
Thus They Live Through Timeless Aeons

Well may they thus live for aeons and aeons,
And they tire not in their devotion;
And thus see the mind`s end
And within see Him as Entity non-separate;
And as one with Siva they live filled in divinity
And so see countless ages of Life Exalted.
Tamil Meaning:
யோகத்தால் அளவற்ற காலம் வாழ்ந்தும் உடல் தளர்தல் இன்றி நின்று யோகக் காட்சியில் அளவற்ற காட்சிப் பொருள் கருத்துப் பொருள்களைக் கண்டு, பின் `அகம், புறம்` என்னும் வேறுபாட்டைக் கடந்தவர், தாம் முன்பு கண்ட பொருள்களுள் ஒன்றையும் பொருளாக மதியாமல் விடுத்துச் சிவம் ஒன்றையே பொருளாகக் கொண்டு, அதனோடு ஒன்றும் நிலையைப் பெறுதற் பொருட்டு வாழ்ந்து, அவ் வாழ்வில், காலமும் முடிவு எய்துதலைக் கண்டு, அதனின்றும் அக் காலத்தைக் கடந்து மேற்போவர்.
Special Remark:
``அகத்துக் கண்டு`` என்க. அயல் - வெளி. `கோடி விட்டுச் சிவம் செறிய` என மாறுக. இறுதியில் உள்ள ``கோடி``, ``முடிவு`` என்னும் பொருளது. ``சிவம்`` என்றது, உயிரெதுகை.
இதனால், காலத்தை முற்றக் கடப்பாரது இயல்பு கூறப்பட்டது.