ஓம் நமசிவாய

மூன்றாம் தந்திரம் - 14. கால சக்கரம்

பதிகங்கள்

Photo

கண்ணன் பிறப்பிலி காண்நந்தி யாய்உள்ளே
எண்ணுந் திசையுடன் ஏகாந்த னாயிடும்
திண்ணென் றிருக்குஞ் சிவகதி யாய்நிற்கும்
நண்ணும் பதமிது நாடவல் லார்கட்கே. 

English Meaning:
Seek Siva-State

He is the One with the Fore-head eye
He is Birthless
He is Nandi within, Know this;
He in solitariness pervades spaces all
He stands as Siva, the goal unwavering
That state you shall attain
If you but seek.
Tamil Meaning:
அருள் உடையவனும், பிறப்பில்லாதவனும் ஆகிய சிவன் உயிர்களின் அகத்தே அவர்கள் காண்கின்ற குருமூர்த்தி வடிவாயும், புறத்தே எட்டுத் திசைகளாயும், முடிவில் ஒருவனேயாயும் இருப்பான். அவனே நிலையான இன்ப வீடும் ஆவான். உண்மையை ஆய்ந்துணர வல்லவர்க்கு, அவர்கள் அடையத்தக்க, முடிந்த பயன் மேற்சொல்லியவற்றை உணர்தலேயாம்.
Special Remark:
``கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர்; கண் ணுடையார் - கண்ணோட்டம் இன்மையும் இல்`` (குறள், 720) என்பவாகலின், கண்ணோட்டம் உடையவன் என்பதனைக் குறிக்க, ``கண்ணன்`` என்றார். பெயக் கண்டும் நஞ்சுண்டு அமையும் (குறள், 580) கண்ணோட்டத் திற்குச் சிவபிரான் ஒருவனே இலக்கியமாதல் வெளிப்படை. `சாதனை யாற் காலத்தை வெல்லும் யோகிக்கு இயல்பாகவே காலத்தைக் கடந்தவனே சார்பாவான்` என்றற்குப் பிறப்பின்மை கூறுவார், சார்ந்தாரைக் காக்கும் கண்ணோட்டத்தையும் உடன் எடுத்தோதினார். ``நந்தி`` என்றது பொதுப்படக் `குரு` என்றவாறு. முன்னர், ``உள்ளே`` என்றதனால், பின்னர், `வெளியே` என்பது பெறப்பட்டது. ``சிவகதி`` என்றதில் சிவம், இன்பம், பதம், பதவி. பயனை, `பதவி` என்றார்.
இதனால், மேல், ``கழியாத அப் பொருள்`` எனப்பட்டதன் இயல்பு தெரித்துக் கூறப்பட்டது.