ஓம் நமசிவாய

மூன்றாம் தந்திரம் - 14. கால சக்கரம்

பதிகங்கள்

Photo

கூத்தவன் ஒன்றிடுங் கூர்மை அறிந்தங்கே
ஏத்துவர் பத்தினில் எண்டிசை தோன்றிடப்
பார்த்து மகிழ்ந்து பதுமரை நோக்கிடிற்
சாற்றிடு நூறு தலைப்பெய்ய லாமே. 

English Meaning:
Vision of the Hundred Petalled Lotus of Sahasrara

Knowing where the divine Dancer dwells,
From the ten petalled lotus of anahata
Raise the prana to the eight petalled anahata
There one can see the Lord seated
Then one lives the hundred years promised in the scriptures.
Tamil Meaning:
சிவன் ஒன்றி நிற்றற்குரிய இம்முறையை அறிந்து இதன்படி, ஒன்றில் பத்து நாளாக மூன்று நாடிகளிலும் மாறி மாறிப் பிராணன் இயங்க, அம்முறை யானே அவனை ஆதார நிராதாரத் தாமரைகளில் வழிபட்டு நிற்பவர், அவ்வழிபாட்டினால் எட்டுத் திக்கும் தாம் இருந்த இடத்திலே விளங்க, அவைகளைப் பார்த்து (தமக்கு யோகம் கைவந்தமைக்கு) மகிழ்ச்சியுற்றுப் பின், அத்தாமரை களில் சிவனை முறையாகக் கண்டு நிற்பார்களாயின், நூல்களிற் சொல்லிய நூறாண்டுக் காலத்தை அவர்கள் குறையாது பெறுதல் கூடும்.
Special Remark:
கூத்தவன் - கூத்தன். கூர்மை - நுட்பம். அஃது அன்னதாகிய முறையைக் குறித்தது. ``அங்கே`` என்றது, பின்வரும் பதுமங்களைச் சுட்டிற்று. ``ஏத்துவர்`` வினையாலணையும் பெயர். `பத்தினில் ஏத்துவர்` என மாற்றிக்கொள்க. எண்டிசை தோன்றுதலைக் கூறியது, யோகம் கைவந்தமை அறியும் குறி கூறியவாறு. பதுமர் - பதுமத்தில் இருப்பவர். `சாத்திடும்` என்பது பாடமன்று. இது, வருகின்ற திருமந்திரத்திற்குமாம்.
இதனால், நூறாண்டிற் குறையாது வாழ்தற்குரிய உபாயம் கூறப்பட்டது.