ஓம் நமசிவாய

மூன்றாம் தந்திரம் - 14. கால சக்கரம்

பதிகங்கள்

Photo

ஆறும் இருபதுக் கையைஞ்சு மூன்றுக்குந்
தேறு மிரண்டு மிருபத்தொ டாறிவை
கூறு மதியொன் றினுக்கிரு பத்தேழு
வேறு பதிஅங்கண் நாள்விதித் தானே.

English Meaning:
The Days it Takes the Yogi to Traverse Adharas and Mandalas

The days that take to pierce the Centres nine are this
Twentieth day adharas six;
Twenty-fifth day Seventh Centre of Fire Mandala
Twenty-sixth day the Eighth Centre of Solar Mandal
Twenty-seventh day the Ninth Centre of Lunar Mandala
—These the days for yogi`s Prana to reach Centres nine.
Tamil Meaning:
முதல் ஆறு திங்கட்குத் தனித்தனி நாள்கள் இருபதும், அடுத்த மூன்று திங்கட்குத் தனித்தனி நாள்கள் இருபத் தைந்தும், அடுத்த இரண்டு திங்கட்குத் தனித்தனி நாள்கள் இருபத் தாறும், இறுதி ஒருதிங்கட்கு நாள் இருபத்தேழும் என்று இவ்வாறு இறைவன் யோகத்திற்குரிய திங்களின் நாட்கணக்கை உலகியலுக்கு வேறாக வகுத்துள்ளான்.
Special Remark:
உலகியலுக்கு வந்துள்ள கணக்கு, மேல், `மனை புகுவீர்` என்னும் மந்திரத்தும் கூறப்பட்டது. யோகத்தைத் தொடங்குவோர் இத்துணை நாளளவே யோகம் புரிந்து எஞ்சிய நாள்களில் ஓய்வு கொள்ளுதல் வேண்டும் என்பதாம். ஓய்வுகொள்ளும் நாள்கணக் கையும், பகிர்ந்து இடைஇடையே கொள்ளுதல் நலமாகும். ஓய்வுநாள் கணக்கை நாழிகையாகவும் பகுத்துக் கொள்ளலாம். தொடக்கத்தில் ஓய்வு மிகுதியாகவும், போகப்போக ஓய்வு குறைந்தும் நிற்றல் அறியத் தக்கது. இவ்வகையில் ஓராண்டு சென்றபின் மீளத் தொடங்கும் பொழுதும் இக்கணக்கின்படியே செய்தல் வேண்டும் என்க.
ஆறுக்கு இருபதும் என உருபையும், உம்மையையும் மாற்றி யுரைக்க. ``மதி, நாள்`` என்றவை இறுதி விளக்காய், மேலான வற்றோடும் சென்று இயைந்தன. ``நாள்`` - ``வேறு விதித்தான்`` என இயையும். பதி - சிவன். அங்கண் - அவ்விடம். அஃது யோகத்தை ஆராயும் இடம்.
இதனால், `யோகம் புரிதற்குரிய நாள் முறை இத்தன்மையது` என்பது கூறப்பட்டது.