ஓம் நமசிவாய

மூன்றாம் தந்திரம் - 14. கால சக்கரம்

பதிகங்கள்

Photo

பிணங்கி அழிந்திடும் பேறது கேள்நீ
அணங்குடன் ஆதித்தன் ஆறு விரியின்
வணங்குட னேவந்த வாழ்வு குலைந்து
சுணங்கனுக் காகச் சுழல்கின்ற வாறே. 

English Meaning:
Missing the Vision, the Body Perishes

Do you know how this body perishes?
Hear this:
A pretty damsel the man has for wife;
And like the sun his prosperity spreads;
And all bow to him in respect;
A body that waxed in a life like thus
Became a prey for prowling dogs to consume.
Tamil Meaning:
யோகம் செய்யாது பிணங்குகின்றவனுக்கு அவன் அடையத்தக்கதாகிய பயன் கிட்டாது கெடும். அஃது அங்ஙனம் ஆகின்றவாற்றை நீ கேட்பாயாக; பெண்டுடன் கூடுகின்ற நாள் மிகு மாயின், முற்பிறப்பில் இறைவனை வணங்கிய புண்ணியத்தால் வந்த மானுடப் பிறப்பின் வாழ்நாள் அளவு தேய, தான் சிலநாள் வாழ்கின்ற வாழ்வும், நாய்க்காக உடம்பை வளர்க்க முயல்வதாய் முடியும்.
Special Remark:
`பிணங்கிக்கு` என்னும் நான்கனுருபு தொகுத்த லாயிற்று. `நான்` எனப்படுவது ஞாயிற்றின் வட்டப்பகுதியே என்றற்கு, ``ஆதித்தன் ஆறு`` என்றார். `ஆதித்தன் ஆறு அணங்குடனாய் விரியின்` என மாற்றியும், ஆக்கம் வருவித்தும் உரைக்க. ஆய், ஆகுமாற்றால். விரிதல் - மிகுதல். `சில வாயினும் குற்றமின்றாம்` என்றற்கு ``விரியின்`` என்றார். `வணங்கு` என்ற முதனிலைத் தொழிற்பெயர், அதன் பயனாகிய காரியத்தின்மேல் நின்றது. சிற்றின்பத்தை மிக விரும்புவோர்க்குக் கால சக்கரம் விரையச் சுழன்று நிற்கும் என்பதாம்.
இதனால், `காலத்தை வெல்ல வேண்டினோர் சிற்றின்பத்தைத் துறத்தல் வேண்டும்` என்பது கூறப்பட்டது.