ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 4. ஒளிவகை

பதிகங்கள்

Photo

ஒளிபவ ளத்திரு மேனிவெண் ணீற்றன்
அளிபவ ளச்செம்பொன் ஆதிப்பிரானும்
களிபவ ளத்தினன் காரிருள் நீக்கி
ஒளிபவ ளத்தென்னோ(டு) ஈசன்நின் றானே.

English Meaning:
Jiva Purified by Siva`s Light Unites in Him

His Holy Form is of shimmering coral-hue;
He wears the holy ashes pure white;
He is brilliant-like pure gold and coral ripe;
He is the Primal Lord;
When, I, dispelled of my darkness,
Shone as coral red,
He, the Dancing Lord,
In me in union stood.
Tamil Meaning:
சிவபெருமான் தனது திருமேனி பவளமும், செம்பொன்னும் போல்வதற்கு ஏற்ப அருமையாலும் அன்பினால் பிறர்க்கு அளிக்கப்படுகின்ற பவளமும், பொன்னும் போல்பவன் அவன், உலகிற்கு மகிழ்ச்சியைத் தருகின்ற பகலவன், உலகத்துத் திணிந்த இருளைப் போக்குதல் போல எனது உள்ளத்தில் திணிந்த இருளைப் போக்கி, `என் அறிவினுள்ளே இருக்கும் பவளம்` என்று சொல்லும்படி என்னும் இருக்கின்றான்.
Special Remark:
``ஆதிப்பிரானும்`` என்பதை முதலிற் கொள்க. உம்மை சிறப்பு. ஆதிப்பிரானும்`` என்பதுடன் முதல் அடியும் கூடிய தொடர் `சிவபெருமான்` என்னும் பொருட்டாய் நின்றது. `வெண்ணீற்றில் ஒளிந்த - மறைந்த பவளத் திருமேனியன்` என்க. ``பவளச் செம் பொன்`` என்னும் உம்மைத் தொகை ஒரு சொல் நீர்மைப்பட்டு நிற்க, அதனோடு ``அளி`` என்பது வினைத்தொகை நிலைப்படத் தொக்கது. அளி - அளிக்கப்படுகின்ற. அன்பினால் ஒருவர் பிறர்க்கு அளிக்கும் பரிசுப் பொருள்களில் பவளமும், பொன்னும் சில அரும்பொருள் களாம். அவ்அருமை பற்றியே அவை இங்குச் சிவபெருமானுக்கு உவமையாகச் சொல்லப்பட்டன.
``வைப்பர் - பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து``* என்பதிலும் பொன் பொதிந்து வைத்துப் போற்றப்படும் அருமை பற்றியே பொறுத்தார்க்கு உவமையாகக் கூறப்பட்டது. இன்னும் ``முன்னோர் மொழிபொருளேயன்றி அவர் மொழியும் - பொன்னே போற் போற்றுவம்``* என்பதிலும் பொன் அருமை பற்றியே உவமை யாயிற்று. ``பவளத்தையும் பொன்னையும்போலச் சிவபெருமான் உள்ளத்துப் பொதிந்து வைத்தப் போற்றுதற்குரியவன்` என்பது, ``அளி பவளச் செம்பொன்`` என்பதனால் குறிக்கப்பட்டது. ``பவளச் செம்பொன்`` என்னும் உம்மைத் தொகை உவம ஆகுபெயர் இனன் - பகலவன் பவளத்து இனன் - பவளம் போலும் நிறத்தையுடைய இனன். களி இனன் - உலகம் களிப்புறுதற்கு ஏதுவாகிய இனன். திணிந்த இருள்` என்றற்குக் ``காரிருள்`` என்றார். `இனன்போல` எனவும் `பவளத்தைப் போல` எனவும் உவம உருபு விரிக்க. ஒளி பவளம் உள்ளத்தில் மறைந்து நிற்கும் பவளம். ``ஈசன்`` என்பது `அவன்` என்னும் சுட்டுப் பெயரளவாய் நின்றது. அதனை மூன்றாம் அடியின் முதலிற் கூட்டுக.
இதனால், சிவன் உயிர்களின் உள்ளொளியாய் நின்று உளளிருளை நீக்கும் அருமை அறியற்பாலதாதல் கூறப்பட்டது.