ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 4. ஒளிவகை

பதிகங்கள்

Photo

இளங்கொளி ஈசன் பிறப்பொன்றும் இல்லி
துளங்கொளி ஞாயிறும் திங்களும் கண்கள்
வளங்கொளி அங்கியும் மற்றைக்கண் நெற்றி
விளங்கொளி செய்கின்ற மெய்காயம் ஆமே.

English Meaning:
Lord`s Form is Light

The Lord is the Effulgent Light,
Birth He has none;
The luminous sun and moon are His eyes;
The lustrous fire is His Fore-Head Eye;
Thus is His Resplendent Form of dazzling Light.
Tamil Meaning:
சிவன் என்றும், எவ்விடத்தும் பிறத்தலை இல்லாதவன் ஆதலால், அவனே இயற்கையாய் விளங்கம் ஒளி. அவனொழிந்த பிற பொருள்கள் எல்லாம் தோற்றம் உடையனவே யாதலால் அவற்றுள் சிலவாகிய முச்சுடர்களும் அவன் ஆக்கிய செயற்கை ஒளிகளே. முச்சுடர்களுள் ஞாயிறும், திங்களும் அவனது வல இடக் கண்களாகவும், தீ பிறருக்கில்லாத மூன்றாவதான நெற்றிக் கண்ணாகவும் உயர்ந்தோரால் சொல்லப்படுகின்றன. இனி அவனது திருமேனியே ஒளிமயமாகலின், ஒளியுடன் விளங்குகின்ற ஆகாயம் அவனது திருமேனியாகச் சொல்லப்படுகின்றது.
Special Remark:
`இலங்கு` என்பது எதுகை நோக்கி ``இளங்கு`` எனத் திரிந்தது. இயற்கையாகவே இலங்குகின்ற ஒளி என்க. இதனை முதல் அடியின் ஈற்றிற் கூட்டி. அதற்கு முன் `ஆதலால்` என்பது வருவித் துரைக்க. ஏனையோரெல்லாம் பிறந்திறந்தமை பலவிடத்தும் கேட்கப் படுகின்றது. துளங்குதல், செயற்கையை உணர்த்திற்று. `மற்றை நெற்றிக்கண்` என மாற்றியுரைக்க. இதனை வேறு வைத்துக் கூறினமையால், இஃது ஏனையோர்க்கு இல்லாமை விளங்கிற்று. முச்சுடர்களும் இறைவனது உறுப்பாதலைக் கூறுகின்றவர், அவற்றிற்கு இடமாகிய ஆகாயம் அவனது உடம்பாதலையும் உடன் கூறினார்.
``ஆகாய வண்ணம் உடையாய் போற்றி``9
என அப்பர் அருளிச் செய்தார். ``ஆகாச சரீரம் பிரம்ம`` எனத் தைத்திரீய உபநிடதம் கூறிற்று. மற்றை உபநிடதங்களிலும் இவ்வாறு கூறப் படுகின்றது. முன் மந்திரத்தில் இயற்கையிற் பெற்றுள்ளதைக் குறித்த ``வளங்கொளி`` என்பது இம்மந்திரத்தில் சிவனிடமிருந்து பெற்றதைக் குறித்தது. காயம் - ஆகாயம் - `காயம் மெய் ஆம்` என இயைக்க.
இதனால், `சுதந்திரமான ஒளியையுடையவன் சிவன் ஒருவனே` என்பது வலியுறுத்தி உணர்த்தப்பட்டது.