ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 4. ஒளிவகை

பதிகங்கள்

Photo

விளங்கொளி அங்கி விரிகதிர் சோமன்
துளங்கொளி பெற்றன சோதி அருள
வளங்கொளி பெற்றது பேரொளி வேறு
களங்கொளி செய்து கலந்துநின் றானே.

English Meaning:
The Light Within is the Source of All Light

The luminaries Fire, Sun and Moon
Their luminousity received by Grace of Divine Light;
The Light that gave that Light
Is a Mighty Light of Effulgence Immense;
That Light dispelling my darkness,
In me stood into oneness suffused.
Tamil Meaning:
[முன் மந்திர்ததிற் கூறியவாறு, `சிவனே அண்டத்திலும், பிண்டத்திலும் ஒளியைத் தருகின்றான்` என்றால், `இங்குக் கண்கூடாகக் காணப்படும் - தீ ஞாயிறு, திங்கள் - என்பவை ஒளியைத் தருகின்றன` எனக் கருதுதல் பிழையோ எனில், அன்று; மற்று.]
ஆங்காங்கு அவ்வப்பொழுது காலவரையறை ஏதும் இன்றி வெளிப்பட்டு மறைகின்ற தீயும், சில கால வரையறைகளின்படி தோன்றி நின்று ஒளியைத் தந்துவிட்டு மறைகின்ற ஞாயிறும், திங்களும் ஆகிய அவையும் அவ்வாற்றால் ஏற்ற பெற்றியால் ஒளியைத் தந்து விளங்குதலு, ஒளியைத் தாராது மறைந்து போதலும் ஆகிய நிலைமையை உடையனவாகச் சிவன் அருள் செய்தனாலேயே அவை ஒரளவில் உலகிற்கு ஏற்ற பெற்றியால் ஒளியைத் தரும் செயற்கைச் சிற்றொளிப் பொருள்களாய் உள்ளன. என்றும் வற்றா வளம் கொண்டவனாகிய சிவன் கொண்டுள்ள ஒளியே முற்றும் நீக்க மாட்டாது சிறிது சிறிது நீக்குகின்ற அந்தச் சிற்றொளிப் பொருள்களை உலகிற்குப் படைத்துத் தந்து தான் அவற்றோடு இரண்டறக் கலந்து அவற்றை நிலைபெறுத்தியும் நிற்கின்றான்.
Special Remark:
துளங்குதல் - அலைதல்; நிலையில்லாது நீங்கியும், தோன்றியும் வருதல். `அங்கி, கதிர், சோமன் ஆகியவை துளங்கு ஒளியையே பெற்றன; சொதி அருளப் பெற்றன` என்க. வளம் கொளி - வளத்தைக் கொண்டிருப்பவன்; இயற்கையாகவே கொண்டிருப் பவன். `பெற்றது` என்றதும், `இயற்கையில் பெற்றிருப்பது` என்றதேயாம். பேரொளி - கால வரையறையும், இட வரையறையும் இல்லாத ஒளி - இஃது, `அளவில் பேரொளி` எனப்படும் `களங்கம்` என்பது ஈற்று அம்முக் குறைந்து நின்றது களங்கமாவது இருள். அதனை அறவே நீக்காது அதனுடன் இருக்கின்ற ஒளிகள் களங்கொளிகளாம். வேறு களங்கொளி - களங்கம் இல்லாத தனது பேரொளிக்கு வேறான களங்க ஒளி. செய்தல் படைத்தல். கலந்து நிற்றல் அவற்றை நிலைபெறுத்தற் பொருட்டு ஆதலின் அது வருவித் துரைக்கப்பட்டது. ``செய்து நின்றான்`` என்னும் பயனிலைக்கு, `அவன்` என்னும் எழுவாய் வருவிக்க.
இதனால், `உலகில் காணப்படும் முச்சுடர்களாகிய ஒளிகளும், சிவனது திருவருட் பேரொளி தந்த ஒளிகளே; சுதந்திர ஒளிகள் அல்ல; அவை அளவில்லனவும் அல்ல` என்பது கூறப்பட்டது. இவ் வுண்மையை விளக்குவதே உமை சிவனது கண்களைப் பொத்திய போது, உலகம் ஒளியையிழந்து இருளடைந்ததைக் கூறும் வரலாறு.