ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 4. ஒளிவகை

பதிகங்கள்

Photo

போது கருங்குழல் போல்நவர் தூதிடை
ஆதி பரத்தை அமரர் பிரானொடும்
சோதியும் அண்டத்தப் பால் உற்ற தூவொளி
நீதியின் அல்லிருள் நீக்கிய வாறே.

English Meaning:
Siva`s Light Becomes Sakti`s Light of Grace

Those who thus went by the Secret Way of Yoga,
Reached Sakti of dark fragrant tresses;
Primal Parai She is;
One with Lord of Celestial`s Light She is;
—The Light beyond the Pure Space;
That Light of Her forever dispelled Pasa`s creeping darkness.
Tamil Meaning:
ஆன்மாக்கள் சிவனுக்குத் தலைவனுக்குப் புதுமணம் செய்துகொண்ட மனைவியர் போன்றவர்கள். சிவனோ, புதுமணம் செய்து கொள்ளப்பட்ட மனைவியர் எளிதில் செல் லொணாத காவற் கட்டடத்தில் உள்ள தலைவன்போல் உள்ளான். இவர் இருதிறத் தாரிடையே தூதாகின்றவள் தலைவனுக்குக் காதற் பரத்தைபோன்ற ஆதி சத்தி. (திரோதான சத்தி) அவளது தூதின் பயனாகச் சிவன் இரங்கி வந்து ஆன்மாக்களது திணிந்த இருளை நீக்கியது வியப்பு.
Special Remark:
போது - பேரரும்பு. `அதனை அணிந்த கருங்குழல்` என்றது, அக்குழலையுடைய புதுமண மனைவியை போல்நவர் - அவளோ டொத்த புதியர். பந்தத்தில் பழையவராயினும் வீட்டிற்குப் புதியரே. உவமையில் பன்மையில் ஒருமை மயங்கிற்று. அருட் சத்தியும், திரோதான சத்தியும் வேறு வேறல்லவாயினும் திரோப வித்தல் சிவனுக்குக் கருத்தன்றாகலின், அதனைச் செய்கின்ற செயல் பற்றித் தனது அறத்திற்கு ஒத்த அருட்சத்தியாகிய தேவியின் வேறான, தனது அறத்திற்கு ஒவ்வாத பரத்தையாக உருவகம் செய்தார். `பரத்தை` என்பது சொல் நயத்தால் பிறிது பொருள் தந்ததாயினும், அது, தொழு பவனை `தொழுத்தை` என்பது போல, `பரத்தின்பால் உள்ளவள்` என்றே பொருள் தரும். சிவனையடைந்து இன்புறுதற்கு உரியவாதல் பற்றித் தலைவனை அடைந்து இன்புறுதற்குரிய சீவான்மாக்கள் பெண்டிரோடு ஒப்பிக்கப்படுதலை,
``இருவர் மடந்தையருக்கு என்னபயன் உண்டு? உண்டாம்,
ஒருவன் ஒருத்தி யுறின்``8
என்பதிலும் காண்க. `இஃது உவமை மாத்திரையேயன்றிப் பொருளன்று` என்பது உணராதார். `உயிர்கள் எல்லாம் பெண்டிர்` எனவும் `இறைவன் ஒருவனே ஆடவன்` எனவும் கூறி மகிழ்வர். அவர், ஆடவர், பெண்டிர்` என்னும் வேற்றுமை மாயாகாரியப் பொருளான உடம்பின் கண்ணதன்றி அறிவேயான நுண் பொருளிடத்து எங்ஙனம் விளங்கக் கண்டனரோ!.
எண் ஒடு ஓரிடத்தில் நின்றே ஏனையிடத்தும் சென்று இயையுமாயின் இங்கு `ஒடு` `போல்நவர்` என்பதனோடும் சென்றியைந்தது. உம்மை அசை. `போது கருங்குழல்போல் நவரோடும், அமரர் பிரானோடும் இடை தூது ஆதி பரத்தை, எனக் கூட்டுக.
இதனால், அனைத்தையும் கடந்து நிற்கும் பேரொளியாகிய சிவன், அனைத்துப் பொருளிலும் கலந்து நின்று இயக்கும் சிற்றொளியாகிய திரோதான சத்தயுடன் நின்று ஆன்மாக்களது ஆணவ இருளை நீக்குதல் கூறப்பட்டது.