ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 1. உடலில் பஞ்ச பேதம்

பதிகங்கள்

Photo

விஞ்ஞானத் தார்க்கா ணவமே மிகுதனு
எய்ஞ்ஞானத் தார்க்குத் தனுமாயை தானென்ப
அஞ்ஞானத் தோருக்குக் கன்மம் தனுவாகும்
மெய்ஞானத் தோர்க்குச் சிவதனு மேவுமே.

English Meaning:
Body Substrates of Jivas in Three Stages of Evolution

Anava (Egoity) is the ground of Vijnanis
Maya is the ground of Pralayakalas
Karma is the ground of Sakalas
Siva is the ground of Jnanis True.
Tamil Meaning:
மூவகை ஆன்ம வர்க்கத்தினருள் விஞ்ஞானகலர் நிலையை ஆணவமே சூக்கும தேகமாய் நிற்கும். இனி அந்த விஞ்ஞானகலர்க்கு அடைய இருப்பவராகிய பிரளயாகலருக்கு அசுத்த மாயையே எல்லா உடம்புமாய் இருக்கும். `ஞானம் இல்லாதவர்` எனப் படுகின்ற சகலர்க்குக் கன்மத்திற்கு ஈடாக வருகின்ற பிராகிருதங்களே உடம்பாகும். ஆகவே, அருள் உடம்பு மெய்ஞ்ஞானைத்தை எய்தினவர்கட்கே வாய்ப்பதாம்.
Special Remark:
மிகு தனு - சூக்கும தேகம். இஃது ஒப்புமையாகக் கூறியது. `நுண்ணிய பந்தம்` என்றபடி. `ஏய்` என்பது `எய்` எனக் குறுகிநின்றது. ஆகவே, அதனையடுத்து `ஞானம்` என்றது முன் சொன்ன விஞ்ஞானத்தையாயிற்று. பிரளயாகலருள் நேரே முத்தி பெறுபவரன்றி, விஞ்ஞானகலராகி முத்தி பெறுபவரும் உளர் என்க. கன்மத்தால் வருவதை, `கன்மம்` என்றார். அவ்வாற்றால் வரும் தனு பெரும்பான்மை பற்றிப் பிராகிருத சரீரத்தைக் குறித்தது. `ஞானிக்குக் காயம் சிவமேய் தனுவாகும்` என்றதனால், `ஏனையோர்க்கு அது வாயாது` என்பதனை வகுத்துக் காட்டி, இறுதியடியால் அதனை நிறுவினார்.
இதனால், மேற்கூறியவற்றுள் சிறப்புடையது ஒன்று இனிது விளக்கப்பட்டது.