ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 1. உடலில் பஞ்ச பேதம்

பதிகங்கள்

Photo

தானவ னாகிய தற்பரந் தாங்கினோன்
ஆனவை மாற்றிப் பரமத் தடைந்திடும்
ஏனை உயிர்வினைக் கெய்து மிடஞ்சென்றும்
வானும் நிலனும் புகுந்தும் வருந்துமே.

English Meaning:
Cycle of Births and Deaths

Having experienced hell and heaven
Jiva leaves Subtle body;
Entering Causal body its course continues;
And like the Yogi that transmigrates
Enters yet another body;
Thus entangled in cycle of birth and death.
Tamil Meaning:
தான் சிவனேயாய் நிற்கின்ற சிவ யோகி, அது காறும் தான் அடைந்திருந்த நிலைகளை யெல்லாம் போக்கி, உடல் நீங்கினபின் அந்நிலைக்கு அப்பாற்பட்ட முடிநிலைப்பேற்றை அடைவான். அந்நிலையை அடையாது தாமேயாய் நிற்கின்ற மற்ற உயிர்கள் தாம் செய்த வினைக்கீடாகக் கிடைக்கின்ற இடங்களில் செல்வனவாய், விண்ணுலகிலும், மண்ணுலகிலும் புகுந்து துன்புறும்.
Special Remark:
தற்பரம் - தனக்கு மேல் உள்ள பொருள். அதனைத் தான் தாங்குதலாவது அதன்கீழ் அடங்கியிருத்தல். அஃதாவது தனக்கென ஒன்றின்றி, எல்லாவற்றையும் அதனுடையதாகவே கண்டிருத்தல். `தான் அவன் ஆதலாவது இதுவே என்றற்கு, `தான் அவன் ஆகிய` என்றதனோடு அமையாது, `தற்பரம் தாங்கினோன்` என்றார். இதுவே ஞான சிவ யோகம். இந்நிலை `அருள் நிலை` என்றும், `சுத்த துரியநிலை` என்றும் சொல்லப்படும். அதனையும் கடந்தது ஆனந்த நிலையாகிய அதீத நிலை யாகலின் அதனை, `பரமம்` என்றார். பரமம் - மேல் எல்லை. `விண் மண், இரண்டுலகத்துள்ளும் உயர்வு தாழ்வான இடங்களில் உயிர் செல்லும்` என்றற்கு, அவற்றை வேறு போல வைத்து, `எய்தும் இடம் சென்றும்` `வானும் நிலனும் புகுந்தும்` வருந்தும் என்றார்.
இதனால், தூலதேகமே நிலையின்றி, மாறி மாறி வருவதாகச் சூக்கும தேகம் வீடுபெறுங்காறும், அல்லது ஊழி முடிவுகாறும் நிலைத்திருத்தல் கூறப்பட்டது.