ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 1. உடலில் பஞ்ச பேதம்

பதிகங்கள்

Photo

காயுங் கடும்பரி கால்வைத்து வாங்கல்போல்
சேய இடம் அண்மை செல்லவும் வல்லது
காயத் துகிற்போர்வை ஒன்றுவிட் டாங்கொன்றிட்
டேயு மவரென்ன ஏய்ந்திடுங் காயமே.

English Meaning:
Jiva Incarnates in Many Bodies

Like the prancing steed
That forward leaps
The Jiva, too, traverses near and far;
Like those who doff one garment
And another
The Jiva, too, from one to the other body moves.
Tamil Meaning:
பகைவரைச் சினக்கின்ற வேகம் பொருந்திய போர்க் குதிரை அண்மை, சேய்மை என்னும் இடங்கட்குத் தக்கபடி முன்கால்களை எட்டி வைத்துப் பின் கால்களை வாங்கிக்கொண்டு தடையின்றி ஓடுதல் போலச் சூக்கும உடல் அண்மை சேய்மைகளுக்கு ஏற்ப விரைந்து செல்ல வல்லது. அதனால், உயிர் அவ்வுடலைப் பற்றிக் கொண்டு, அத்தன்மையில்லாத தூல உடம்புகளுள் ஒன்றை விட்டு நீங்கி மற்றொன்றை எங்கு வேண்டுமானாலும் சென்று எடுத்துக் கொள்ளும். தூல சரீரம் சூக்கும சரீரத்தின் மேல் போர்வைபோலவே உள்ளதாகும். அதனால், உயிர் தூல உடம்பில் ஒன்றை நீக்கி விட்டு, மற்றொன்றை எடுத்துக் கொள்ளுதல் மக்கள் தமது போர்வை ஒன்றை நீக்கிவிட்டு மற்றொன்றை எடுத்துப் போர்த்துக் கொள்ளுதல் போல்வதே.
Special Remark:
`வல்லது` என்னும் பயனிலைக்கு எழுவாய் முன் மந்திரத்தினின்றும் வந்தது. `போர்வை ஒன்றை விட்டு ஒன்றை இட்டு ஏயும் அவர் என்ன உயிர் காயத்தை ஏயும்` என்க. காயம் - தூல தேகம். ஏயும் - பொருந்தும். `உயிர்` என்பது ஆற்றலால் வந்து இயைந்தது. `ஏயும் அவரென்ன` என்றாராயினும் `அவர் ஏய்த்தல் என்ன` என்றலே கருத்து என்க. தாம் கூறிய சொற் கிடக்கைக்கு ஏற்ப `அவர்` என்றார். ஆகவே கருத்திற்கு ஏற்ப அது `மக்கள்` எனப்பட்டது.
இதனால், `தூல தேகத்தை விட்டு உயிர் நீங்குதலே இறப்பு என்பதும், அது மற்றொரு தூல தேகத்திற் சேர்தலே பிறப்பு` என்பதும் கூறப்பட்டன. தூல தேகம் சூக்கும தேகத்தினின்றே தோன்றுவ தாயினும் அதனைக் கொண்டே சூக்கும தேகம் அறிதல் செய்தல்களை இயற்றலால் எடுத்துக் கொள்வதாகக் கூறப்பட்டது. இதனானே உயிர் பல பிறப்புக்களில் செல்லுமாறும் கூறப்பட்டதாம். பிறப்புக்களின் மாற்றம் வினை நிமித்தமாக நிகழ்வது.