ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 1. உடலில் பஞ்ச பேதம்

பதிகங்கள்

Photo

நாகம் உடல்உரி போலும் நல் அண்டசம்
ஆகும் நனாவில் கனாமறந் தல்லது
போகலும் ஆகும் அரன்அரு ளாலே சென்(று)
ஏகும் இடம்சென்(று) இருபயன் உண்ணுமே.

English Meaning:
In the Waking State Dreams and Forgotten; So it is Through Successive Lives

Even as the snake sloughs off its skin
And another assumes;
Even as the bird its shell leaves
And another life pursues;
In its waking state the Jiva forgets
Happenings of the dream state;
Thus does Jiva from one body to another migrate;
Until with Grace of Hara
It reaches where it is destined to be;
And there experiences
The Karmas two, good and evil.
Tamil Meaning:
இவ்வுலகில் ஓர் உடம்பை விட்டு நீங்கிய உயிர் இறைவனது அருளாணையின்படி வேறோர் உடலில் சென்று, அவ் வுடலுக்குரிய இடத்தை அடைந்து, முன்பு இருந்து இடத்தில் அனுபவித்த அனுபவங்களை மறந்து அவ்விடத்து வரும் இன்பத் துன்பங்களை அனுபவிக்கும் அவை எவை போல எனின், பாம்பு முன்பிருந்த உடம்பாகிய தோலை நீக்கிவிட்டுப் புதிய உடம்பைப் பெறுதல் போல்வதும், முட்டையிற் பிறக்கும் உயிர்கள் முன்பு முட்டைக்குள் இருந்து பின்பு வெளிவந்து வேறு இடத்தை அடைதல் போல்வதும், கனவில், முன்பு நனவில் நிகழ்ந்தவற்றை மறத்தல் போல்வதுமாகும்.
Special Remark:
`அரனருளாலே` என்பது முதலாகக் கொண்டு உரைக்க. முதற்கண் `சென்று` என்பதற்கு மற்றோர் உடம்பில் சென்று என்பது பொருளாகும். இஃது இவ்வுலகிலே மறுபிறப்பு எடுப்பதையே குறித்தது. `ஆகும்` என்றனவும், `போலும்` என்றவாறேயாம். நனவு, கனவோடொப்ப, `நனா` எனப்பட்டது. அல்லது - வேறு நிகழ்ச்சி. போகல் - நிகழ்தல். `நனாவில் நிகழ்ந்தவற்றைக் கனாவில் மறந்து, அல்லது போகல் போல்வதுமாம்` என்க. பாம்பு தோல் உரித்தல் ஓர் உடலைவிட்டு வேறு உடலில் செல்லுதற்கும். அண்டசம் ஓர் இடம் விட்டு, வேறொர் இடத்தை அடைதற்கும், நனவில் நிகழ்ந்தவற்றைக் கனவில் மறத்தல் முன் பிறப்பில் நிகழ்ந்தவற்றை அடுத்த பிறப்பில் மறத்தற்கும் உவமையாகச் சொல்லப்பட்டன. `பன்னகம் அண்டசங்கள்` என்னும் சிவஞான சித்திச் செய்யுளையும்,l அதன் உரையையும் இங்கு ஒப்பிட்டுக் காண்க.
இதனால், மறுபிறப்பு உளதாதல் பற்றித் தூல தேகத்திற்கு வேறாய்ச் சூக்கும தேகம் முதலியன உளவாதல் தெளிவிக்கப்பட்டது.