ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 1. உடலில் பஞ்ச பேதம்

பதிகங்கள்

Photo

ஞானிக்குக் காயம் சிவமேய் தனுவாம் அஞ்
ஞானிக்கூன் நிற்கு முடம்பே யதுவாகும்
மேனிற்கும் யோகிக்கு விந்துவும் நாதமும்
மோனிக்குக் காயம்முப் பாழ்கெட்ட முத்தியே.

English Meaning:
Body Substrates of Evolved Beings

Siva is the ground of Jnani`s body,
Jnani`s body is Siva`s body,
Yogi`s body is Nada and Bindu,
Mauni`s body is Mukti
Beyond Voids Three.
Tamil Meaning:
மெய்ஞ்ஞானிக்கு உடம்பாவது சிவனது அரு ளாகிய உடம்பேயாம், அஞ்ஞானிக்கு உடம்பாவது புலாலால் ஆகிய அந்த உடம்பேயாம். அஞ்ஞானிக்குமேல் நிற்பவனாகிய யோகிக்குப் பைசந்தி வாக்கும் அதற்கு மேல் உள்ள சூக்குமை வாக்கும் தக்கபடி உடம்பாகும். ஞானத்தின் மேல் எல்லையாகிய மோன நிலையை எய்தியவன் முப்பாழையும் கடந்த முத்தி நிலையையே உடம்பாகக் கொண்டிருப்பான்.
Special Remark:
சிவம் ஏய் தனு - சிவத்தைப் பொருந்தி உள்ள உடம்பு. அஃது அருளே. முதல் இரண்டடிகளில் முறையே மேல் நிற் பவனையும், கீழ் நிற்பவனையும் பற்றிக் கூறினமையின், மூன்றாம் அடியில் இடை நிற்பவனைப் பற்றிக் கூறினார். ஈற்றடி முடிநிலையை எய்தினோனைப் பற்றிக் கூறியது. எனவே, `ஞானி` என்றது துரிய நிலையில் நின்றவனையேயாம். மோனி, அந்த நிலையை அடைந் தவன். சீவன் முத்தனாவான் அவனே. யோகிகளுள் சவிகற்ப சமாதியை அடைந்தவன் பைசந்தி வாக்கைக் கடக்கமாட்டாது அதனுட் பட்டும், நிருவிகற்ப சமாதியை அடைந்தோன் சூக்குமை வாக்கைக் கடக்க மாட்டாது அதனுட்பட்டும் நிற்பன் என்றபடி. `உடம்பாகும்` என்பது மூன்றாம் அடி ஈற்றிலும் சென்றியையும். எனவே, மோனியைத் தவிர ஏனையோர் யாவரும் ஓரளவில் பந்தம் உடையவர்களேயாயினர். முப்பாழ் ஆவன பின்னர்க் கூறப்படும்.
இதனால், `யோகியரும், ஞானியரும் தூலசூக்கும சரீரங்களோடு கூடி நிற்பாராயினும் அவர் அவற்றால் கட்டுண்ணாது, மந்திர வடிவராயும் நிற்பர்` என்பது கூறப்பட்டது.