ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 1. உடலில் பஞ்ச பேதம்

பதிகங்கள்

Photo

உடம்பிற்குள் நாலுக் குயிராய சீவன்
ஒடுங்கும் பரனோ(டு) ஒழியாப் பிரமம்
கடந்தொறும் நின்ற கணக்கது காட்டி
அடங்கியே அற்றதிங் காரறி வாரே.

English Meaning:
Jiva Has Five Experiences

The Jiva that as experient spirit stood (in Avastas)
In all bodies, this and four rest (Jagrat, Swapna, Sushupti, Turiya and Turiyatita)
Will in Para merge;
Who knows the way it merges
Into Param that pervades all
As like space in every pot,
Inside and out!
Tamil Meaning:
தூல உடம்புக்குள் சூக்கும உடம்பாய் நிற்கின்ற அந்தக்கரணங்கள் நான்கிற்கும், மேலும் நுண்ணிதான அதிசூக்கும உடம்பைக் கொண்டு இயக்கும் முதற்பொருளாய் உள்ள சீவான்மாத் தான் பரமான்மாவாகிய சிவத்தில் வியாப்பியமாய் நிற்கும். ஆகவே, எப்பொருளிலும் எஞ்சாது நிறைந்து நிற்கும் பிரமப் பொருளாகிய சிவம், தான் ஒன்றேயாயினும் பல சீவான்மாக்களிலும் வியாபித்து அதனதன் தன்மைக்கேற்ப ஏகதேசமாயும் நின்று, பின் சீவான்மா சீவத்துவம் (பசுத்துவம்) நீங்கிய பொழுது தன்னைப் போலவே வியாபகமாகிவிடுதலால் அவ்வேகதேசத் தன்மை நீங்கி வியாபகமாகி விடுகின்ற தன்மை, ஞாயிறு ஒன்றேயாய் வியாபகமாயினும் பல குடங் களில் உள்ள நீரில் எல்லாம் அதனதன் அளவிற்கேற்ப வேறு வேறு அளவில் பலவாய்த் தோன்றி, அக்குடங்களில் நீர் நீங்கிய பொழுது முன்பு நின்ற சிறு நிலையின் நீங்கி வியாபகமாகிவிடுகின்ற தன்மையை ஒக்கும் என்னும் உண்மையை அறிந்தனர் எத்துணைப் பேர்!
Special Remark:
`கணக்கு` என்றது, `நிலைமை` என்றபடி. அஃது உவமம் குறித்து நின்றது. அது, பகுதிப்பொருள் விகுதி. `கடம்` என்றது, `நீர் உள்ள குடத்தையே என்பதும் `நின்றது ஞாயிறு` என்பதும் ஆற்றலால் கொள்ளக் கிடந்தன. `காட்டி` என்றது, `ஒத்துநிற்றலைத் தெளிவாகப் புலப்படுத்தி` என்றவாறு. `அடங்கி` என்றது, `ஏக தேசமாய்த் தோன்றி` எனவும், `அற்றது` என்றது, `அவ்வேகதேசத்தின் நீங்கி வியாபகமானது` எனவும் கூறியவாறு. `ஆர் அறிவார்` என்றது, `ஒரு பிரமமே, ஞாயிறு ஒன்றாயினும் பல குடங்களில் பலவாய்த் தோன்றுதல் போல, பல உடம்புகளில் பல சீவராய்த் தோன்றும்` என மயங்கிக் கூறும் ஏகான்மவாதிகளை உட்கொண்டு கூறியது. ஞாயிறு குடங்களில் உள்ள நீரில் தோன்றினும் ஞாயிறேயாய் விளங்குத லன்றிப் பிற இயல்புகளைப் பெற்று வேறுபட்டுத் தோன்றுதல் இல்லை. சீவரோ பிரமப் பொருளின் தன்மையினின்றும் பெரிதும் வேறுபட்டுத் தோன்றுதல் தெளிவு. சிறப்பாகப் பிரமம் ஞானானந்த மயத்தது. சீவர் அஞ்ஞான துக்கமயத்தர். இதனை அறியாமையே யன்றி, உவமையில், `குடம், நீர், ஞாயிறு` என மூன்று பொருள்கள் உளவாக, பொருளில் `பிரமமும், உடம்பும்` என இரண்டையே கூறுதலால் அவரைக் கருதி, `ஆர் அறிவார்` என்றார்.