ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 1. உடலில் பஞ்ச பேதம்

பதிகங்கள்

Photo

எண்சாண் அளவாய் எடுத்த உடம்புக்குள்
கண்கால் உடலில் கரக்கின்ற கைகளில்
புண்கால் அறுபத்தெட் டாக்கை புணர்க்கின்ற
நண்பால் உடம்பு தன்னால்உடம் பாமே.

English Meaning:
Twenty-Four Bodily Tattvas (Universals)

The body eight spans measures
With eyes, legs and hands
That serve to cover it;
In that body of pores and sores
He conjoins Tattvas twenty and four
In love divine;
Thus this body He fashions,
That has four more to speak of.
Tamil Meaning:
உடம்பை `எண்சாண் உடம்பு` என்றல் யாவரும் அறிந்தது. `அவரவர் கையால் எண்சாணேயாகும்` என்பது இதன் பொருள். `எறும்பும் தன் கையால் எண்சாண்` (தனிப்பாடல் திரட்டு, என்றார் ஔவையார். இந்த அளவு யாவராலும் நன்கறியப்பட்ட தூல தேகத்தைப் பற்றியதே. அந்த உடம்பிற்றானே கண் முதலிய ஞானேந்திரியங்களும், கால் முதலிய கன்மேந்திரியங்களும் ஆற்றல் வடிவாய்ச் சூக்குமமாய்த் தோன்றாது நிற்கின்றன. எவ்வாற்றா லேனும், எவ்விடத்திலேனும் ஊறு உண்டாகுமாயின் அவ்விடம் புண்ணாகிக் குருதியையும், சீழையும் ஒழுக விடுகின்ற தூல தேகத்தைத் தோற்றுவித்தற் பொருட்டு மேற்கூறிய அறுபத்தெட்டுக் கருவிகளைத் தக்கவாற்றால் திருவருள் ஒன்று சேர்க்கின்ற சேர்க்கையால் ஓர் உடம்பிலிருந்து மற்றோர் உடம்பு தோன்றுவதாகும்.
Special Remark:
எடுத்த - ஆக்கப்பட்ட. `உடலிற் கைகளில் எனக் கூட்டுக. `கரக்கின்ற` என்றது. அன்பெறாதுவந்த அஃறிணைப் பன்மை வினைமுற்று. `கை` என்றது `ஒருபுடை` என்றபடி. `அந்த இடம் ஊறுபட்ட இடம்` என்பது, `புண்கால்` என்றதனால் விளங்கிற்று. காலுதற்குச் செயப்படுபொருள்கள் வருவிக்கப்பட்டன. `புண் கால் ஆக்கை புணர்க்கின்ற அறுபத்தெட்டன் நண்பால், உடம்பால், உடம்பு ஆம்` என இயைக்க. `புண் கால் ஆக்கை` என்றது, `தூல உடம்பு` என்ற வாறு. `அதனைத் தோற்றுவித்தற்காகவே அதற்குமுன் சூக்கும உடம்பு ஆக்கப்படுகின்றது` என்றற்கு, `புண் கால் ஆக்கை புணர்க்கின்ற அறுபத்தெட்டு` என்றார். சேர்க்கை, `நண்பு` எனப்பட்டது. அது பான்மை வழக்கு, `உடம்பால் உடம்பு ஆம்` என்றதற்கு, சூக்கும `உடம்பால் தூல உடம்பு தோன்றும்` எனவும், சில தூல உடம்புகளால், வேறு சில தூல உடம்புகளும் தோன்றும் எனவும் இருபொருள் கொள்க. தூல உடம்பால் தூல உடம்பு தோன்றுதலே இனப் பெருக்கமாம். தன், சாரியை.
இதனால், தூல சூக்கும உடம்புகள் ஒருவகையில் காரியங்களாயும், ஒருவகையில் காரணங்களாயும் நிற்குமாறு கூறப்பட்டது.