ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 1. உடலில் பஞ்ச பேதம்

பதிகங்கள்

Photo

அத்தன் அமைத்த உடல்இரு கூற்றினில்
சுத்தம தாகிய சூக்குமம் சொல்லுங்கால்
சத்த பரிச ரூப ரசகந்தம்
புத்திமன்ஆங் காரம் புரியட்ட காயமே.

English Meaning:
Subtle Body

Of the body thus God shaped,
In parts two,
Sukshma (Subtle) is One;
That a body of constituents eight is;
—Sound, touch, shape, taste and smell
Buddhi (Intellect), Mana (Mind) and Ahankara (Egoity)
That the Puriashta body is (subtle).
Tamil Meaning:
இறைவன் உயிர்கட்காக அமைத்துக் கொடுத்த, `தூலம், சூக்குமம்` என்னும் இருவகை உடம்புகளுள் (தூலஉடம்பின் இயல்பு பற்றி மேலே கூறினோம்) இனி அதுபோலப் புலால் நாற்றம் நாறுதல் இன்றியே உயிர்க்குப் பயன்படுகின்ற சூக்கும தேகத்தைப் பற்றிக் கூறுமிடத்துச் சத்தம் முதலிய தன் மாத்திரைகள் ஐந்தும், அந்தக் கரண நான்கனுள் சித்தம் ஒழிந்த ஏனை மூன்றும் ஆக எட்டும் கூடிய தாகும். அதனால் அது, `புரியட்டகாயம்` என்றும் சொல்லப்படும்.
Special Remark:
ஐவகை உடம்புகளில் மேற்கூறிய இரண்டு உடம்பின் இயல்பினையே கூறப் புகுந்தமை பற்றி, `அத்தன் அமைத்த உடல் இரு கூறினில்` என்றாரல்லது, `ஏனை உடம்புகள் அத்தனால் அமைக்கப் பட்டன அல்ல` என்றிலர் ஆகலின், அனைதுடம்புகளும் அத்தனால் அமைக்கப்பட்டன ஆதற்குத் தடையின்மை அறிக. `அனைத்தையும் ஆக்கி, அழிக்கும் அத்தன் ஒருவன் உளன்` என்பதை மேலெல்லாம் பல்லாற்றானும் தெளிவித்துப் போந்தமையால், இங்கு அதனை நினைப்பிக்கும் அளவில் `அத்தன் அமைத்த உடல்` என அனு வாதமாகக் கூறினார். வகையை `கூறு` என்றார். சத்தம் முதலிய ஐந்தும் சிறப்பு நிலை எய்தியவழியே செவி முதலிய பொறிகட்குப் புலனாகும். அப்பொழுது அவை `புலன்` என்றும், `விடயம்` என்றும் சொல்லப் பட்டு, ஆகாயம் முதலிய பூதங்களின் குணமாய் நிற்கும். அப்பொழுது அவை, தாத்துவிகங்களாம். அவை சிறப்புநிலை எய்தாது பொதுமை யில் நிற்கும்பொழுது பொறிகட்குப் புலனாகாது, புலனாகாது, ஆகாயம் முதலிய பூதங்கள் தோன்றுதற்குக் காரணமாய் நிற்கும். அப்பொழுதே அவை `தன்மாத்திரைகள்` எனப்படும். தன் மாத்திரைகள் தத்துவங்களாம். ஆகாயம் முதலிய பூதங்கட்குக் காரணம் ஆதல் பற்றித் தன்மாத்திரைகள் `சூக்கும பூதம்` என்றும் சொல்லப்படும்.
அந்தக்கரணங்கள் நான்கனுள் மேல் நிற்பதாகிய சித்தம் பரசரீரப் பகுதியாதலின், ஏனை மூன்றுமே சூக்கும சரீரப் பகுதியாம் என்க.
ஆகம பேதங்களின், `தாத்துவிகங்களே தூலசரீரம்; தத்துவங்கள் யாவும் சூக்கும சரீரம்` என்னும் ஒரு கருத்து உள்ள தாயினும் இங்கு நாயனார், `தன்மாத்திரை ஐந்தும், அந்தக்கரணம் மூன்றும் கூடியதே சூக்கும சரீரம்` எனத் தெளிவாகக் கூறினமையின், மேற்கூறிய ஒரு கருத்தை இங்கு நோக்க வேண்டுவதில்லை, `இங்குக் கூறப்பட்ட கருத்தே காலோத்தரம் முதலிய ஆகமங்களில் சொல்லப் பட்டது. என்றார் சிவஞான போத மாபாடியம் உடையார். l
`மனம்` என்பது கடைக் குறைந்து `மன்` என நின்றது,
இதனால், மேற்கூறிய இரு பேதங்களுள் `சூக்குமம்` எனப்பட்ட உடலின் இயல்பு வேறெடுத்து வகுத்துக் கூறப்பட்டது.