ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 1. உடலில் பஞ்ச பேதம்

பதிகங்கள்

Photo

ஆறந்த மாகி நடுவுடன் கூடினால்
தேறிய மூவாறும் சிக்கென் றிருந்திடும்
கூறுங் கலைகள் பதினெட்டுங் கூடியே
ஊறும் உடம்பை உயிருடம் பென்னுமே.

English Meaning:
Kala Body Holds Life

If though Adharas six
You unite through central Sushumna,
The nine orifices tightly controlled will be;
The body within of Kalas eighteen formed will be;
That the body of Jiva will be.
Tamil Meaning:
யோகமுறையால் ஆறு ஆதாரங்களும் கீழாகி யதனால், அவற்றிற்குமேல் உள்ள பிரமரந்திரத்தை அடைந்தால், அங்ஙனம் அடைந்தவருடைய தூல உடம்பு விரையில் அழிந் தொழியாது உறுதி பெற்று நெடுநாள் இருக்கும். அந்நிலையில் சூக்கும உடம்பும் அதற்கு சார்பாய் உறுதிப்பட்டு நின்று, அதனை என்றுமே உயிர் உள்ள உடம்பாகச் செய்யும்.
Special Remark:
முன்னர், `மூவாறு` என்றது தூல உடம்பின் கூறுக ளாகிய பூதம் ஐந்து, ஞானேந்திரியம் ஐந்து, கன்மேந்திரியம் ஐந்து, இவற்றிற்கு முதலாக அகங்கார வகை மூன்று ஆகிய பதினெட்டினை, பின்னர், `கலைகள் பதினெட்டு` என்றது. புரியட்ட காயமாகிய சூக்கும உடம்பின் தத்துவம் எட்டும், பத்து வாயுக்களாகிய தாத்துவிகம் பத்தும் ஆகப் பதினெட்டினை. வாயுக்கள் தூல தேகத்தனவாயினும் அவற்றாலே சூக்கும உடம்பு செயற்படுதல் பற்றிச் சூக்கும தேகக் கூறுகளுடன் கூட்டி எண்ணினார். இக்கருத்தே பற்றிச் சூக்கும உடம்பு. `பிராணமயகோசம், எனப்படுதலை நினைக. `ஊறும் உடம்பு` என்றது மேல், `புண் கால் ஆக்கை` என்றது போன்றது என்னும் - எனச் செய்யும். சிக்கென்றிருத்தல் - உறுதிபெற்றிருத்தல்.
இதனால், விரைவில் அழிதற்பாலதாகிய தூல உடம்பை அங்ஙனமாகாது நீடியிருக்கச் செய்யுமாறு கூறப்பட்டது. இது மேல் மூன்றாம் தந்திரத்துள் `காய சித்தி` அதிகாரத்துள் விரிவாகக் கூறப்பட்டதாயினும். `உடம்புகளைப் பற்றிக் கூறும் இவ்விடத்தில் நினைவூட்டுதல் நன்று` என்னும் கருத்தால் சுருங்கக் கூறப்பட்டது.