ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 1. உடலில் பஞ்ச பேதம்

பதிகங்கள்

Photo

ஆரே அறிவார் அடியின் பெருமையை
ஆரே அறிவார் அருந்தவம் நின்றது
ஆரே அறிவார் அறுபத்தெட் டாக்கையை
ஆரே அறிவார் அடிக்காவ லானாதே.

English Meaning:
div align=center>God is Within the Body

Who knows the greatness of His Holy Feet
Who knows
There within the body He stood!
Who knows this body
Of Tattvas six and ten eight!
Who knows that
He is its Yeoman Guard!
Tamil Meaning:
மேல், `அத்தன் அமைத்த உடல்` என்றபடி உயிர்களின் தகுதியை அறிந்து அத்தகுதிக்கேற்பப் பல்வேறு வகையான உடம்புகளை அமைத்துத் தருகின்ற இறைவனது அருள் மிகுதியையும் ஆற்றலின் மிகுதியையும் அறிய வல்லுநர் யாவர்; அந்நிலையில் `மக்களாய்ப் பிறந்தோர் அவ்வுடம்பைப் பெறுதற்குப் பல பிறவிகளில் தாம் செய்த நல்வினை இவை` என்பதை அறிய வல்லுநர் யாவர்; மக்களுடம்பு அசுத்த உலகத்து உளது ஆதலின் அஃது அவ்வுலகத்திற்கு மேல் உள்ள மிச்சிர உலகம், சுத்த உலகம் என்பவற்றில் உள்ளோரது உடம்புகளில் உள்ள கருவிகட்குமேல் அறுபத்தெட்டுக் கருவிகள் கூடியது என்பதை அறிபவர் யாவர்! மூவகை உலகத்து உயிர்கட்கும் திருவருளே முதற்காவலாய் உள்ளது என்பதை அறிகின்றவர் யாவர்! ஒருவரும் இல்லை.
Special Remark:
முதற்கண் `அடி` என்றது இறைவனது திருவடியை, அது திருவருளே. `தத்துவம் தொண்ணூற்றாறு` என்பது வைதிகசமயம் அனைத்திற்கும் பொதுவான ஒரு கொள்கை. அத்தொண்ணூற்றாறும் தத்துவம், தாத்துவிகம்` என இரண்டாகவே பகுக்கப்படும். அவற்றுள் `தத்துவம் எத்தனை` என்பதில் சமயங்கள் வேறுபடுகின்றன. ஆகவே, `தாத்துவிகங்கள் எவை, என்பதிலும் ஒருமித்த கருத்து இல்லை. கட்டளைகளிலும் தாத்துவிகங்கள் பல்வேறு வகையாகவே சொல்லப் படுகின்றன. சைவ சித்தாந்தத்தில் தத்துவம் முப்பத்தாறு ஆகலின், தாத்துவிகம் அறுபதேயாதல் வேண்டும். அந்த அறுபதையும் கட்டளை களை ஒட்டிப் பலர் பல வகையாகக் கூறுகின்றனர். அவைகள் சில காரணங்களால் பொருத்தமாகத் தோன்றவில்லை. மாதவச் சிவஞான யோகிகள் `தாத்துவிகம் அறுபதும் ஐம்பெரும் பூதங்களின் கூறுகளே` என்கின்றார்.8 அதுவே பொருத்தமானதாகத் தெரிகின்றது. எனினும், பூதங்களின் கூறுகளாக அவர் ஞானேந்திரிய விடயம் ஐந்து, கன்மேந்திரிய விடயம் ஐந்து, பிராணாதி வாயுக்கள் பத்து என்னும் இருபதை மட்டுமே கூறி `மற்ற நாற்பது எவை` என்பதைக் கூறாது விடுத்தார் ஆயினும் நாடிகள் பத்தும் ஆகாயத்தில் கூறுகளாகும். ஆக முப்பது போக மற்றை முப்பதும் மேற்கூறிய என்பு, தோல், இறைச்சி முதலியனவாகவும், மற்றும் பூதக் கூறுகளாகக் கட்டளைகளில் கூறப் படுவனவற்றையும் கொள்ளுதல் வேண்டும். எனவே, தாத்துவிகம் அறுபதில் அவற்றிற்கு மூலமாகிய மாபூதம் ஐந்து, தன்மாத்திரை ஐந்து என்பவற்றையும், அந்தப் பூதமும், தன்மாத்திரையும் இன்றிச் செயற்படமாட்டாத இருவகைப் பத்து இந்திரியங்களையும் அடக்கி, தூல தேகக் கருவிகளை `அறுபதே` என்றும், சூக்கும தேகக் கருவி `மேற்கூறப்பட்ட எட்டே` என்றும் வைத்து, `ஆகத் தூல சூக்கும தேகக் கருவிகள் அறுபத்தெட்டு` என, அறுபத்தெட்டாக்கை என்றார். எனவே `ஆக்கை` என்றது, தூல சூக்கும தேகங்களை யாயிற்று. இந்த இருவகை உடம்பும் சகலருக்கல்லது, பிரளயாகலர் விஞ்ஞான கலருக்கு இல்லையாதல் அறியத்தக்கது.
இதனால், `மக்களுக்குச் சிறப்பாக அமைந்த தூல சூக்கும தேகத்தின் இயல்பையும், அவற்றை அவ்வுயிர்கட்கு வழங்கிய இறைவனது அருளையும், ஆற்றலையும் அறிவுடையோர் ஆழ்ந்து நோக்க வேண்டும் என்பது கூறப்பட்டது.