ஓம் நமசிவாய

ஏழாம் தந்திரம் 38. இதோபதேசம்

பதிகங்கள்

Photo

ஆட்கொண் டவர்தனி நாயகன் அன்புற
மேற்கொண் டவர்வினை போயற நாடொறும்
நீர்க்கின்ற செஞ்சடை நீள்தன் உருவத்து
மேற்கொண்ட வாறலை வீவித்து ளானே.

English Meaning:
Guru is Lord Siva Himself

The Guru who admitted him into his loving Grace,
Is Lord Himself;
He works day by day
For the disciple`s Karma to perish;
In the form of Lord
Of flowing russet locks
That wears the dripping Ganga
The Guru appears
And our sorrows ends.
Tamil Meaning:
ஒப்பற்ற தலைவனாகிய சிவன் தான் குருவாகி வந்து ஆட்கொள்ளப் பெற்றவர்களுள் பின்னும் நாள்தோறும் அக்குரு வடிவின்கண் அன்பு மேலும், மேலும் மிகச் செய்கின்றவரது வினைகள் சேய்மைக்கண் விலகிக் கெடும்படி, தனது இயற்கை உருவத்தில் நீண்டசடையினிடத்தே கங்கையை அடக்கி வைத்திருப்பது போல் அவற்றின் ஆற்றலை அடக்கி அவரிடத்தே விட்டு நீங்காதிருப்பான்.
Special Remark:
`ஆட்கொண்டவர்`` என்றது, `ஆட்கொள்ளப் பட்டவர்`` எனச் செயப்பாட்டு வினைப்பொருள் தந்து நின்றது. ``அங்கணர் ஒலை காட்டி ஆண்டவர் தமக்கு நாடு`` (தி.12 தடுத்தாட்கொண்ட பு.1) என்பதிற் போல, `ஆட்கொண்டவருள்` என `உள்` என்னும் உருபு விரிக்க, ``தனிநாயகன்`` என்பதை முதலிற் கொள்க, நாள்தொறும் உற மேற்கொண்டவர். நீர்போல நெகிழ்ந்துபோதலை, நீர்த்துப் போதல்` என்னும் வழக்குப் பற்றி, ``நீர்ததும்புகின்ற சடையை நீர்க்கின்ற செஞ்சடை`` என்றார் ``ஆறு`` என்பது உவம உருபாய் நின்றது. சிவனது உருவத்தை இங்கு ``நீர் உருவம்`` என்றது, பகீரதன் பொருட்டு ஆகாயத்தினின்றும் குதித்த கங்கையை உடனே தாங்கி நின்ற கோலம் நோக்கியாம். உயிர்களைத் தாக்கி மெலியச் செய்கின்ற வினைகளது ஆற்றல் கரையை மோதிக் கரைக்கின்ற கடல் அலையோடு ஒத்தல் பற்றி அவையாக உருவகம் செய்தார். ``ஆகாய கங்கையைத் தனது சடைகளுள் ஒன்றின் உரோமத்தின் நுனியில் புல்நுனியில் நீர்போல நிற்குமாறு அடக்கிய பெருமானுக்கு வினையின் ஆற்றலை அடக்குதல் அரிதன்று` என்றற்கு `நீள்தன் உருவத்தின் நீர்க்கின்ற செஞ்சடை மேற்கொண்டவாறு வீவித்துளான்` என்றார். வீதலுக்குப் பிற வினை வீவித்தல், வீவித்தான்` என்றே ஒழியாது ``வீவித்துளான்`` என்றார் உடம்புள்ள துணையும் பிராரத்தம் விளைந்து கொண்டே விருத்தலின் அதனை மெல்வித்தற் பொருட்டு அவன் இமைப் பொழுதும் நீங்காது உடன் நிற்றல் பற்றி, சிவன் குருவாகி வந்து அருள்செய்யும் பொழுதே சஞ்சிதம் வறுத்த விதைபோலக் கெட்டொழியினும், பிராரத்தம் உடம்போடு ஒட்டி நிகழ அந்நிகழ்ச்சி உடல் ஊழாய் நிற்றல் அல்லது வரும் பிறவிக்கு வித்தாக ஆகாமியத்தைத் தோற்றுவியாது கழிதற் பொருட்டுத் தன்னால் ஆட்கொள்ளபட்டவருள் தொடர்ந்து அன்பு செய்பவரிடம் விளங்கி முன் நிற்பான் என்பது உணர்க. இங்ஙன மாகவே, சிவன் குருவாகி வந்து ஆட்கொள்ளப்பட்ட பின்பும் குருவையே சிவனாகக் கண்டு அன்புசெய்து வழிபடுவார்க்கன்றி ஏனையோர்க்கு முன்போல ஆகாமியவினை விளைந்து அது சஞ்சிதம் ஆக, மீட்டும் பிறவியே விளையும் என்பது விளங்கும். இதுபற்றியே,
தன்னை அறிவித்துத் தான்தானாச் செய்தானைப்
பின்னை மறத்தல் பிழையலது.
என்றார் மெய்கண்ட தேவரும் (சிவஞானபோதம், இறுதி வெண்பா). பிழையலது - தப்பமுடியாத குற்றம்; உய்தியில் குற்றம். பிழைத்தல் - தப்புதல் இதனால், ``குருவான் ஆட்கொள்ளப்பட்டார் அதன்பின் குருவையே சிவமாகத் தேறி வழிபட்டு வருதல் இன்றியமையாதது` என்பதும் ``அங்ஙனம் வழிபடாதவழிப் பழையே நிலையே ஆய்விடும்`` என்பதும் கூறப்பட்டன.
``அருபரத் தொருவன் அவனியில் வந்து
குருபரனாகி அருளிய பெருமையைச்
சிறுமையென் றிகழாதே திருவடி யிணையைப்
பிறிவினை யறியா நிழலது போல
முன்பின் னாகி முனியாது அத்திசை
என்பு நைந் துருக, நெக்குநெக் கேங்கி
அன்பெனும் ஆறு கரையது புரள,
நன்புலன் ஒன்றி, ``நாத`` என் றரற்றி
உரைதடு மாறி, உரோமஞ் சிலிர்ப்பக்
கரமலர் மொட்டித்து இருதயம் மலரக்,
கண்களி கூர, நுண்துளி அரும்பச்
சாயா அன்பினை நாடொறுந் தழைப்பவர்
தாயே யாகி வளர்த்தனை போற்றி``
-தி.8 போற்றித் திருவகவல் - 75-87
என்னும் திருமொழியும் இங்குக் கூறிய வழிபாட்டு அநுபவ வழி எழுந்தது என்க.
குருலிங்க சங்கமம்` என்னும் மூன்றன் வழிபாடு ஞானத்தைப் பெறுமுன்னர் அதற்குச் சாதனமாயும் பெற்றபின்னர் அதனைநிலை பெறுத்துவனவாயும் இருத்தலின் அவையே யாவராலும் செயற்பாலன என்பதை வலியுறுத்தியவர், அவற்றுள் குருவழிபாடு ஞானியர்க்குத் தலையாதலை எடுத்துக் கூறி, இத்தந்திரத்தை முடித்தார். இதனுள் இன எதுகையும், ஆசெதுகையும் வந்தன.