ஓம் நமசிவாய

ஏழாம் தந்திரம் 38. இதோபதேசம்

பதிகங்கள்

Photo

மறந்தொழி மண்மிசை மன்னாப் பிறவி
இறந்தொழி காலத்தும் ஈசனை உள்கும்
பறந்தல மந்து படுதுயர் தீர்ப்பான்
சிறந்த சிவநெறி சிந்தைசெய் யீரே.

English Meaning:
Think of Siva`s Holy Way

Away forget,
This transient life here below;
Even like the day your life passes away
Think of the Lord;
Flying He comes to you,
And your distracting sorrows end;
Do, therefore, think
Of Siva`s Holy Way.
Tamil Meaning:
மண்மேல் உள்ள பிறவிகள் நிலையின்றிச் சின்னாளில் அழிந்தொழிவனவேயாம். ஆதலின் அவற்றுள் சில பிறவிகளை உயர்ந்தனவாகக் கருதி அப்பிறவியில் பிறக்க வேண்டும் என விரும்புதலை விட்டுவிடுங்கள். அங்ஙனம் விட்டு வீடுபெற விரும்பும் பொழுது அதன் பொருட்டுப் பிற நெறிகளை நாடாது, நெறிகள் அனைத்திலும் மிக மேலானதாகிய சிவ நெறியை நாடுங்கள். நாடி அதனை அடைந்து இறக்குங் காலம் உட்பட எக்காலத்தும் சிவனை இடைவிடாது நினையுங்கள். அவ்வாறு நினைந்தால் அவன் நலனடைதற் பொருட்டு அதற்கான வழிகளைத் தேடி எவ்விடத்தும் விரைந்து ஓடி அலையும் நம் அலைவை நீக்கியருளுவான்.
Special Remark:
புதியன புகுதல் முறையில் புகுந்த முன்னிலைப் பன்மை ஏவல் விகுதியாகிய `உம்` என்பது ``மறந்தொழி`` என்பதன் ஈற்றில் தொகுத்தலாயிற்று. உலகத்தில் அரசரும், அவரோடொத்த பெருஞ்செல்வருமாய்ப் பிறக்கும் பிறவி இனிதானது என ஏனையோர் விரும்புதல் உண்டு ஆதலின், `அஃது ஒரு மயக்க உணர்வேயாதலின் அதனை விடுத்தல் வேண்டும்` எனவும், `விடுத்தவழி வீடுபெறுதலே விரும்பப்படும் ஆதலின் அதன் பொருட்டுப் பிறவி நீங்கப் பெறாத பிறர் பலரை முதல்வராகக் கொண்ட நெறிகளை நாடாது பிறப்பில் பெருமானாகிய சிவனை முதல்வனாகக் கொண்ட சிவநெறியையே நாடுதல் வேண்டும். `அதனை நாடி அடைந்தவழியும், அந்நெறியின் முறைமைகளை இடைவிடாது கடைப்பிடித்து ஒழுகுதல் வேண்டும்` எனவும் அறிவுறுத்தபடி. ஈற்றடியை இரண்டாம் அடியாகக் கூட்டி யுரைக்க. ``சிறந்த`` என்பது இயைபின்மை நீக்கிய விசேடணம். இனி பிறிதின் இயைபு நீக்கிய விசேடணமாகக் கொண்டு, `சித்தாந்த சைவம்` என உரைத்தலுமாம். ஐந்தாம் தந்திரத்தில் நாயனார் சில சைவ வேறுபாடு குறித்தமையை நினைவுகூர்க.
இதனால், `உய்திவேண்டுவார்க்கு உரிய நெறி இது` என்பது உணர்த்தப்பட்டது.