ஓம் நமசிவாய

ஏழாம் தந்திரம் 38. இதோபதேசம்

பதிகங்கள்

Photo

நியமத்த னாகிய நின்மலன் வைத்த
உகமெத் தனையென் றொருவருந் தேறார்
பவமத்தி லேநின்று பாய்கின்ற தல்லால்
சிவமத்தை ஒன்றும் தெளியகில் லாரே.

English Meaning:
Cascade of Births

The Pure One, as Creator of all
Many aeons, allotted;
How many they are,
None knows;
Into the cascade of births they leap;
Beyond that,
Of Siva they nothing clear know.
Tamil Meaning:
`ஒவ்வொரு பொருளையும் அதனதன் தன்மையில் நிற்குமாறு நிறுத்தி நடத்துபவனாகிய சிவபெருமான் அனைத்து உயிர்களையும் வீடு பெறுவிக்க எத்தனை யுகங்களை வரையறுத் திருக்கின்றான்` என்பதை அறிய வல்லவர் ஒருவரும் இல்லை, இந்நிலையில் அவரவரும் அச்சிவபரம் பொருளை உள்ளவாறு உணரும் நெறியால் உணர்ந்து பிறவியினின்றும் நீங்குதலையே ஒவ்வொருவரும் செய்தலே தக்கதாய் இருக்க, ஒருவரும் அதனைச் சிறிதும் செய்யாது, பிறவிக் கடலிலே குதித்து அதன் கரையைக் காணாது அமிழ்கின்றனர்.
Special Remark:
`அதனை அவர்கள் விட்டொழிதல் வேண்டும்` என்பது குறிப்பெச்சம். வலியுறுத்தற் பொருட்டுப் பின்னிரண்டு அடிகளில் எதிர் மறையாற் கூறப்பட்டது. தெளிவின் பொருட்டு உடன்பாட்டால் உரைக்கப்பட்டது. `பாய்தல்` என்றது குறிப்புருவகம். ``பவமது, சிவமது`` - என்ற `அது` இரண்டும் பகுதிப் பொருள் விகுதிகள். `பவ மதிலே, சிவமதை` என்பன இடையே ஒற்று விரித்தல் பெற்றன. இம் மந்திரம் உயிரெதுகை பெற்றது.