ஓம் நமசிவாய

ஏழாம் தந்திரம் 38. இதோபதேசம்

பதிகங்கள்

Photo

ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
நன்றே நினைமின் நமனில்லை நாணாமே
சென்றே புகுங்கதி யில்லை நும் சித்தத்து
நின்றே நிலைபெற நீர்நினைந் துய்மினே.

English Meaning:
One the Family, One the God

One the family,
One the God;
Thus intense hold,
No more will death be;
None Other is Refuge,
With confidence you can seek;
Think of Him and be redeemed,
In your thoughts, holding Him steadfast.
Tamil Meaning:
உலகத்தார் பல சாதிகளைக் கூறுவராயினும் உண்மையில் உள்ளது ஒரு சாதியே. அது சிவ சாதி. உலகத்தார் பல கடவுளர்களைக் கூறிக் கொண்டாடுவராயினும் உண்மையில் உள்ள கடவுள் ஒருவனே. அவன் சிவன். இவற்றை நீவிர் முதலில் நன்றாக உணருங்கள். உணர்ந்தால், நமனும் உங்களை அணுகான்; வெட்கமின்றி முன்முன் பிறந்து இறந்த பிறப்புகளிலே மீண்டும் மீண்டும் பிறக்கும் நிலையும் உங்களுக்கு இல்லையாகும். அப்பால் மேற்கூறிய உண்மைகள் உங்கள் உள்ளத்தில் அசையாது நிலைபெற, அதன்வழிப் பின்னர்ச் சிவனை இடையறாது நினைந்து உய்தி பெறுங்கள்.
Special Remark:
``ஒன்றே, ஒருவனே`` என்னும் தேற்றேகாரங்களால் அவற்றிற்கு மாறாக அறியாதார் பல கூறுதல் பெறப் பட்டது. ``ஒன்று`` எனப் பட்ட குலம் இது என்பதும். ``ஒருவன்`` எனப்பட்ட தேவன் சிவன் என்பதும் முன் முன் மந்திரங்களின் வழிவரும் தொடர்பால் இனிது விளங்கின, ``சிவ சாதி`` என்றது. சிவன், சத்தி இவரையே அப்பனும் அம்மையுமாய்க் கொண்டு பிறந்தவர்கள் என்றதாம், முதற்கண் ``நினை மின்`` என்றது அதற்கு முன்கூறிய உண்மையைக் குறித்தும், பின்னர் ``நினைந்து`` என்றது, அவ்வுண்மை உள்ளத்து நிலைபெற்றதன் பயனாக நினைக்கும் பொருளைக் குறித்தும் என்க. முன்னர் ``நமன் இல்லை`` என்றதனால், பின்னர்க் கூறிய உய்தி துன்பம் நணுகாத எல்லையில் இன்பத்தை அடைதலாம். கதி - பிறப்பு.
இதனால், `பொது மக்களது பொதுநெறியிற் செல்லாமல் விடுத்து, மேன்மக்களது மேல் நெறியிற் செல்க என உணர்த்தப் பட்டது.