ஓம் நமசிவாய

ஏழாம் தந்திரம் 38. இதோபதேசம்

பதிகங்கள்

Photo

நரருஞ் சுரரும் பசுபாசம் நண்ணிக்
கருமங்க ளாலே கழிதலின் கண்டு
குருஎன்பவன் ஞானி கோதிலன் ஆனால்
பரம் என்றல் அன்றிப் பகர்வொன்று மின்றே.

English Meaning:
Hold on to Guru

The humans and Celestials
Inveighed by Pasas
In Karma perish;
Seeing this,
Why not hold to Guru
That is Jnani,
And blemishless Pure
As Param Supreme itself?
No more then to speak of.
Tamil Meaning:
மக்களே யாகுக; அவரினும் மேற்பட்ட தேவரே யாகுக; எல்லோரும் பாசத்துட்பட்ட பசுக்களேயாய் வினைவழிவந்து நீங்கிப் போதலின், `குரு` எனப்படுபவன் அந்நிலையை உணர்ந்து பாசத்தின் நீங்கி நிற்றலால், `ஞானி` என வேறுவைத்து எண்ணப் படுதலால், அவனை, `பதி` எனவே கூறுதல் வேண்டுமன்றி, வேறு சொல்லுதற்கில்லை.
Special Remark:
அஃதாவது, `பசு` என்பதற்கில்லை என்பதாம். எழுவகைப் பிறப்புக்களுள் உயர்ந்தவை மக்கட்பிறப்பும், தெய்வப் பிறப்புமே யாகலின் அவற்றையே சிறந்தெடுத்துக் கூறினார். கூறவே, ஏனைப் பிறப்புக்களும் அவற்றுள் அடங்கின. எனவே, உயிர் வகைகளாக நாம் அறிவன யாவும் பசுக்களேயாதலால் அவை நிலை யான இன்பத்தைப் பெறவிரும்பும் தமது விருப்பம் நிறைவேறாமல் துன்பப்பட்டு உழலவே காண்கையாலும், `குரு` எனப் படுபவன், அவ்வாறன்றி, ``நாம் ஆர்க்கும் குடியல்லோம், நமனை அஞ்சோம் ஏமாப்போம்; பிணியறியோம்; இன்பமே எந்நாளும், துன்பம் இல்லை`` (தி.6 ப.98 பா.1) என்று சொல்லிச் செம்மாந்து இன்புற்றிருக்கக் காண்கையாலும், அவனை ஏனையோரில் ஒருவனாக வைத்து, ``பசு`` எனல் கூடாமையும், அவ்வியல்பு பதிக்கன்றிப் பிறர்க்கு இன்மையால் ``பதி`` என்றலே ஏற்புடையதாதலும் விளங்கும் என்றவாறு. `கழிதலின் குரு என்பவன் (அவற்றைக்) கண்டு கோதிலன் ஆனால் ஞானியாதலின் பதி என்றல் அன்றிப்பகர்வு ஒன்றும் இன்றே` என இயைக்க, `ஆனால்` என்பது தெளிவின்கண் வந்தது, நீ இப்படிச் செய்வதனால், நான் உன்னுடன் இருக்க இயலாது` என்பது போல. இதனால், `குரு சிவனே` எனப்படுதற்குக் காரணத்தை விளக்கியவாறு, இதனானே ``குருவே சிவம்`` என்றல் மலம் நீங்கித் தூயராய்ச் சிவன் அவரெனத் தானென வேறாகாது அவரே தானாய் அவரிடத்துத் தயிரில் நெய்போல விளங்கி நிற்கப் பெற்ற நிறைஞானியரை நோக்கியன்றி, வேடமாத்திரத்தால் `குரு` என நிற்பாரை நோக்கியன்று என்பதும் இனிது விளங்கும்.