ஓம் நமசிவாய

ஏழாம் தந்திரம் 38. இதோபதேசம்

பதிகங்கள்

Photo

கூடியும் நின்றும் தொழுதெம் இறைவனைப்
பாடி உளேநின்று பாதம் பணிமின்கள்
ஆடி உளேநின் றறிவுசெய் வார்கட்கு
நீடிய ஈற்றுப் பசுவது வாமே.

English Meaning:
Lord Yearns After Devotees

Praise Our Lord
In devotion congregational;
Sing His praise within,
And at His Feet adore;
Dance within and know Him;
Then He yearns after you,
Like the cow after its calf.
Tamil Meaning:
எங்கள் சிவபெருமானை அவன் அடியவரோடு கூடியும், தனித்தும், பாடியும், ஆடியும் வணங்குவதுடன் உள்ளத்திலே யும் அவனது திருவடிகளை நினைந்து அடிபணியுங்கள். ஏனெனில், உள்ளத்திலே நினைந்து பணிபவர்கட்குக் கன்றையீன்ற பசு அக் கன்றைவிட்டுப் பிரியாதது போலக் கரவாது விளங்கி அருள் செய்வான்.
Special Remark:
செய்யுளுக்கேற்ப ``ஆடி`` என்பதனை வேறு வைத்து ஓதினாராயினும், முன்னர் கூறிய கூடுதல் முதலியவற்றுடன் ஒருங்கு வைத்து ஓதுதலே கருத்து என்க. நிற்றல் - தனித்து நிற்றல். உள்ளே நிற்றல் - ஒருங்கிய மனத்தோடு கூடி நிற்றல். பணிதல், அறிதல்களைச் சுருக்கம் கருதி வேறு வேறு வைத்தாராயினும் அவற்றையும் ஒருங்கு வைத்து இருமுறை ஓதுதலே கருத்தாம். அறிதல், இங்கு நினைத்தல், நீடுதல், பிரியாது உடன் இருத்தலைக் குறித்தது. அறிவு - அறிதல். அது பகுதிப் பொருள் விகுதி.