ஓம் நமசிவாய

ஏழாம் தந்திரம் - 35. சற்குரு நெறி

பதிகங்கள்

Photo

அசத்தொடு சத்தும் அசற்சத்து நீங்க
இசைத்திடு பாசப்பற்று ஈங்கறு மாறே
அசைத்திரு மாயை அணுத்தானும் ஆங்கே
இசைத்தானும் ஒன்றறி விப்போ னிறையே.

English Meaning:
Lord Attaches Mayas to Jiva for Attainment of True Knowledge

The Sat, Asat, and the Sat-Asat to free,
The Pasa`s bonds here to sunder,
He activated Mayas Two — Suddha and Asuddha—
And to Jiva, He them attached,
And imparted the peerless Light of Knowledge, too,
He, the Lord.
Tamil Meaning:
சத்தோடு கூடியவழிச் சத்தாம் தன்மையும், அசத்தோடு கூடியவழி அசத்தாம் தன்மையும் உடைத்தாதல் பற்றி, `சதசத்து` எனப் பெயர் பெற்ற உயிரை அநாதியில் சத்தோடு சேராது நீங்கச் செய்து, அசத்தோடு சேர்த்த ஆணவ மலத்தொடர்பு இப்பெத்த காலத்தில் அற்றொழிதற் பொருட்டு, `சுத்த மாயை, அசுத்த மாயை` என்னும் இருமாயைகளைச் செயற்படுத்தி, உயிரையும் அச்செயற் பாட்டிற்கு உள்ளாக்கியவனும், பின் என்றும் திரிபின்றி ஒருபடித்தாய் நிற்பதாகிய உண்மையை உணர்த்தி, அவ்வுயிரை உய்யக் கொள்கின்ற வனும் இறைவனேயன்றிப் பிறர் இல்லை.
Special Remark:
`அசற்சத்து சத்தினின்றும் நீங்கச் செய்து அசத்தோடு இசைத்திடு பாசப்பற்று` என இயைத்துக் கொள்க. `சதசத்து` என்பதே வழக்காயினும் செய்யுள் நோக்கி அதனை முன் பின்னாக மாற்றி `அசற்சத்து` என்றார். ``நீங்க`` என்பதன் பின், `செய்து` என்பது சொல் லெச்சமாய் எஞ்சி நின்றது. ``ஈங்கு`` இசைத்திட்டபின் உளதாகிய பெத்த நிலையை. ``அணு`` என்பது இரண்டாவதன் பொருள்மேல் ``இசைத்தான்`` என்றதனோடு தொக்கது. தான், அசை. உம்மை, மாயையை அசைத்ததேயன்றி என இறந்தது தழுவி நின்றது. அறிவித்தாய் அறிவிப்போனும் என்னும் உம்மை தொகுத்தலாயிற்று. அதன் காரியத்தையும் உடன் தோற்றி நின்றது. ஏகாரம், பிரிநிலை. எனவே, `ஒன்றை அறிவித்த சற்குரு, இதற்கு முன்னுள்ளவற்றை யெல்லாம் செய்த இறைவனே` என்றபடி.
இதனால், சற்குரு சிவனே யாதல் அருளல் தொழில் அவனுடையதேயாதலை ஏனைத் தொழில்கள் நிகழுமாற்றின் வைத்து உணர்த்தும் முகத்தால் தெளிவிக்கப்பட்டது.