ஓம் நமசிவாய

ஏழாம் தந்திரம் - 35. சற்குரு நெறி

பதிகங்கள்

Photo

அத்தன் அருளின் விளையாட் டிடம்சடம்
சித்தொ டசித்துத் தெளிவித்தச் சீவனைச்
சுத்தனு மாக்கித் துடைத்து மலங்களைச்
சத்துடன் ஐங்கரு மத்திடுந் தன்மையே.

English Meaning:
Lord`s Play in the Arena of Jiva`s Body

The fleshy body is the arena of Lord`s Play,
He imparts to Jiva,
Knowledge clear of Chit and Achit,
Purifies him
Wipes off the Malas
And consigns him to the Sat (Real),
Like Himself the Five Acts to perform;
—These the Play of the Lord`s Grace.
Tamil Meaning:
சிவன் தனது கருணை காரணமாகச் செய்யும் முத் தொழில்களாகிய விளையாட்டு நிகழும் இடம் சடமாய மாயை யினிடத்திலாம். ஆயினும் அவ்விளையாட்டிற்குப் பயன் அறிவுடைப் பொருளாகிய உயிரை, `சித்து இவை, அசித்து இவை` என்பதை அறியச் செய்து மும்மலங்களைத் துடைத்துத் தூய்மையுறப் பண்ணி வேறு இரு தொழில்களால் மெய்ப்பொருளை அடையச் செய்தலேயாகும்.
Special Remark:
முத்தொழிலுக்கு வேறாய இருதொழில்களாவன மறைத்தலும், அருளலும். எனவே முத்தொழில்களின் வழி முன்னர் மறைத்தலை அடையப் பண்ணிப் பின்பு அதன் பயனாகப் பக்குவத்தை வருவித்து அருளலை அடையப் பண்ணுதலே சடத்தின்மேல் செய்யும் முத்தொழிற்குப் பயனாதல் விளங்கும்` ``இடம் சடம்`` என்றதனால் முதற்கண் ``விளையாட்டு`` என்றது படைத்தல் முதலிய முத்தொழில் களையே குறித்தன. என்னை? ஏனை இரண்டிற்கும் இடம் சடம் ஆகாமையின். `முத்தொழில்` என்பதை முதற்கண் வெளிப்படையாகக் கூறாமை பற்றி அவையும் அடங்க இறுதியில் ``ஐங்கருமம்`` என்றா ராயினும் அதனால் குறிக்கப்பட்டன எஞ்சிய இரு தொழில்களேயாம். சத்தாகின்றவனும் அத்தனேயாயினும் அதனை வேறு போலக் கூறினார், `முடிந்த பயனான பரமுத்தி நிலை அது` என்பது உணர்த்துதற்கு.
இதனால், `இறைவன் செய்யும் தொழில்களில் முடிவானது சற் குருவாய் வந்து ஞானத்தை அருளுதலே` என்பது கூறப்பட்டது.