ஓம் நமசிவாய

ஏழாம் தந்திரம் - 35. சற்குரு நெறி

பதிகங்கள்

Photo

சத்தும் அசத்தும் சதசத்தும் தான்காட்டிச்
சித்தும் அசித்தும் சிவபரத் தேசேர்த்துச்
சுத்தம் அசுத்தம் அறச்சுக மானசொல்
அத்தம் அருட்குரு வாம்அவன் கூறிலே.

English Meaning:
Holy Guru Imparts Nature of Truth

He reveals the Real (Sat), the Unreal (Asat) and the Real-Unreal (Sat-Asat);
He takes Chit (Jiva) and Achit (Tattvas) into Siva-Para;
The words the blessed Guru speak Are blissful,
Beyond Pure (Suddha) and (Asuddha) Impure.
Tamil Meaning:
சிவனது அருளே தன் வடிவாய் நிற்கின்ற உண்மைக் குருவாகிய அவன் தன் மாணாக்கர்க்கு ஒரு வார்த்தையைச் சொல்வானாயின் அந்த ஒரு வார்த்தை முப்பொருளின் இயல்பை உள்ளவாறு விளங்கச்செய்து, ஏனை எல்லாப் பொருளும் சிவ வியா பகத்தை விட்டு வேறு நில்லாமையைப் புலப்படுத்தி, சுத்தம், அசுத்தம் என்னும் இருவகைப் போகங்களும் அல்லாத வேறு ஒரு தனிப் போக மாகிய பரபோகத்தை விளைத்து நிற்கும் வார்த்தையாய் இருக்கும்.
Special Remark:
`அதனால் அத்தகைய குருவை அடைந்த மாணாக்கர் ஞானத்தை எய்தி, வீடு பெறுதல் உறுதி` என்பது கருத்து. நான்காம் அடியை முதற்கண் வைத்து, கூறுதலுக்குச் செயப்படுபொருள் வருவித் துரைக்க. `ஒருவார்த்தை, மகா வாக்கியம், பெரும்பெயர்` என்பன ஒரு பொருட் சொற்கள். ``மன்ன என்னை ஓர் வார்த்தையுட்படுத்துப் - பற்றினாய்`` (தி.8 செத்திலாப் பத்து, 2) என்றதனால் அவ்வார்த்தை இத்தன்மைத்தாதல் விளங்கும். இது பற்றியே,
``சாத்திரத்தை யோதினர்க்குச் சற்குருவின் தன்வசன
மாத்திரத்தின் வாய்க்கும்நலம் வந்துறுமே``
-திருக்களிற்றுப்படியார், 6
எனச் சொல்லப்பட்டது. சத்து பதி; அசத்து பாசம்; சதசத்து பசு. சித்து - சேதனப் பிரபஞ்சம்; உயிர்கள். அசித்து - அசேதனப் பிரபஞ்சம்; உயி ரல்லன. ஆணவமும், கன்மமும் உயிரோடு, ஒற்றித்து நிற்பன. சேர்ந்து நிற்றலை விளக்குதலைச் சேர்த்தலாக. உபசரித்துக் கூறினார். `சுத்தம், அசுத்தம்` என்பன ஆகுபெயர். சுத்த போகம் சுத்தப் பிர பஞ்சத்திலும், அசுத்த போகம் அசுத்தப் பிரபஞ்சத்திலும் உள்ளன வாம். சிவபோகம் இவற்றின் வேறாய், மேம்பட்டதாய், எல்லையின்றியிருத்தலை அறிக. சுகத்தை ஆக்கும் சொல்லை, ``சுகம் ஆனசொல்`` என்றதும் உபசாரம். இதன்பின் `ஆம்` என்னும் பயனிலை எஞ்சிநின்றது.
இதனால், குருவினால் ஞானம் எய்தி, வீடுபெறுமாறு கூறப்பட்டது.