ஓம் நமசிவாய

ஏழாம் தந்திரம் - 35. சற்குரு நெறி

பதிகங்கள்

Photo

தாள்தந் தளிக்கும் தலைவனே சற்குரு
தாள்தந்து தன்னை அறியத் தரவல்லோன்
தாள்தந்து தத்துவா தீதத்துச் சார்சீவன்
தாள்தந்து பாசம் தணிக்கும் வசனத்தே.

English Meaning:
Holy Guru Leads Disciple to Truth

Placing his feet on my head
The Master blesses me;
He is Guru Holy;
He, my self-realization, works;
He takes the Jiva to the State beyond Tattvas;
He subdues my Pasas,
All these he performs
—He that is Truth itself.
Tamil Meaning:
சற்குருவே தன்னையடைந்த மாணாக்கர்க்குத் திரு வருளை வழங்கிக் காக்கும் பதியாவான். அவனையடைந்த மாணவனுக்கு அவன் தனது திருவடியைச் சென்னிமேல் சூட்டித் திருவடி ஞானத்தை அருளுமாற்றால் மாணவன் தனது உண்மை இயல்பை அறியும்படி செய்யவல்லான். அவன் தனது ஒரு வார்த்தை யாலும், திருவடி சூட்டலாலும் தன்னை யடைந்த மாணவனாகிய பசுவை மாயா கருவிகளினின்றும் விடுவித்து, ஆணவக் கட்டினையும் அவிழ்த்துவிடுவான்.
Special Remark:
`அத்தன்மைகளால் அவனது சற்குருவாம் தன்மையைத் தெளிக` என்பது குறிப்பெச்சம். திருவருளை, `திருவடி` என்றல் மரபு. தாள் முயற்சியும் ஆம் ஆதலின் அது `முயற்சி` என்னும் குறிப்பினையும் உடையது. திருவருள் எல்லாம் வல்லதாதலை நினைக. ``குருவே சிவன்`` (தி.10 மந்.6) `சற்குருவே தலைவன்` என மொழிமாற்றி யுரைக்க. தன்னை அறிந்தபின் தலைவனை அறியத் தடையில்லை ஆதலின் அதனையே கூறி யொழிந்தார். ``சீவன்`` என்றது, `பசு` என்றபடி, `அவன் வசனத்தாலும், தாள் தந்தும் தத்துவாதீதத்துப் பாசம் தணிக்கும்` என்க. முதலடி ஒழிந்த ஏனை அடிகளில் ``தாள் தந்து`` என வந்தது சொற்பொருட் பின்வருநிலையணி.
இதனால், `சற்குருவினது பெருமை அவனது செயலால் விளங்கும்` என்பது கூறப்பட்டது.