ஓம் நமசிவாய

ஏழாம் தந்திரம் - 35. சற்குரு நெறி

பதிகங்கள்

Photo

மாணிக்க மாலை மலர்ந்தெழு மண்டலம்
ஆணிப்பொன் னின்றங் கமுதம் விளைந்தது
பேணிக்கொண் டுண்டார் பிறப்பற் றிருந்தார்கள்
ஊணுக் கிருந்தார் உணராத மாக்களே.

English Meaning:
Divine State Ends Birth`s Cycle

In the sphere (of cranium)
Where the garland of scarlet rubies glows,
He the unalloyed Gold,
There stood;
The divine nectar welled up there;
They who swilled it,
Ended their birth`s cycle;
They who did not
Remained but to gormandize.
Tamil Meaning:
மாணிக்க மணிகளைக் கோத்த ஒரு வடத்தைத் தூங்கவிட்டது போல உடம்பினுள்ளே ஒன்றின்மேல் ஒன்றாய் அமைந்து ஒளிவிட்டு விளங்கும் ஏழு மண்டலங்கள் உள்ளன, அங் கெல்லாம் அவற்றுக்கு மேல் உள்ள மாற்றுயர்ந்த பொன் போல்வ தொரு நற்பொருளினின்றும் ஓர் அமுதம் ஊற்றெடுத்துப் பாய்கின்றது. அதனையறிந்து போற்றிக்கொண்டு உண்டவர்களே பிறப்பற்றிருக் கின்றார்கள். அதனை அறியாதவரெல்லாம் விலங்கொடொத்து உணவை உண்டு வயிறு வளர்ப்பதற்காகவே வாழ்கின்றனா.
Special Remark:
`அவர் பிறவிக் கடலினின்றும் ஏறமாட்டார்` என்பது கருத்து. `மலர்ந்தன` என அன்பெறாது `மலர்ந்த` என நின்ற வினை முற்றின் இறுதிநிலை தொகுத்தலாயிற்று. ``மலர்ந்த`` என்றது, `மலர்ந்தன போன்றுள்ளன` என்னும் பொருளைத் தந்தது. ஏழு மண்டலமாவன மூலாதாரம் முதலாக உச்சி ஈறாக உள்ளவை. அவை தாமரை மலர் வடிவின ஆதல் பற்றி, `மாணிக்க மாலை மலர்ந்தன போன்றுள்ளன`, என்றார். ஏழாந் தானத்திற்கு மேல் நிராதாரமான பன்னிரண்டங்குலத்தைக் கடந்த மீதானத்தில் உள்ள செம்மேனி யனாகிய சிவனை ``ஆணிப் பொன்`` என உவமையாகு பெயரால் கூறினார். ஏழாந்தானத்திற்றானே அமுதம் ஊறுவதாயினும் அஃது அருள் மயமாதல் சிவனாலேயாதல் பற்றி அவனிடத்தினின்றே அமுதம் ஊறுவதாகக் கூறினார்.
இதனால், `சற்குரு அருளால் சிவஞானத்தைப் பெற்றோர் பின் இச்சிவயோக சாதனாத்தால் நிட்டை கூடல் வேண்டும்` என்பது கூறப்பட்டது.