ஓம் நமசிவாய

ஏழாம் தந்திரம் - 35. சற்குரு நெறி

பதிகங்கள்

Photo

உற்றிடும் ஐம்மலம் பாச உணர்வினால்
பற்றறும் நாதன் அடியில் பணிதலால்
சுற்றிய பேதம் துரியம்மூன் றால்வாட்டித்
தற்பரம் மேவுவோர் சாதக ராமே.

English Meaning:
True Disciples Adore Holy Guru

By Pasa`s sensations, the Five Malas arise;
Adoring feet of Guru in love intense,
Purified in Turiya Awareness Three
They the Supreme State attain;
They alone are Sadhakas true.
Tamil Meaning:
பக்குவம் இன்மையால் உயிர் பாச ஞானத்தையே உண்மை ஞானமாகக் கருதி நிற்றலால் அனாதியே அதனைப் பற்றிய ஐம்மலங்களும் அதனை விட்டு நீங்காது அதனைப் பற்றியே நிற்கும். பக்குவம் வந்தபொழுது பாச ஞானத்தை வெறுத்துப் பதியாகிய சிவனை நோக்கி நின்று அவனைப் பல முறையால் வணங்குதலால் முன் கூறிய ஐம்மலங்களும் அற்றொழியும். ஆகவே, தம்மைக் கட்டி யுள்ள பாசக் கூட்டத்தால் தாம் சிவனை விட்டு நீங்கியிருக்கும் நிலையை முத்துரிய நிலைகளால் முறையே போக்கிச் சிவனை அடைய முயல்பவரே சற்குருவின் அருள்வழி நிற்கும் சாதகர் ஆவார்.
Special Remark:
`சற்குருவின் அருளைப் பெற்றும் அங்ஙனம் முய லாதவர் சாதகர் ஆகார்; அஃதாவது பயன்பெற்றவர் ஆகார்` என்பதாம். `பாச உணர்வினால் ஐம்மலம் உற்றிடும் எனவும், `நாதன் அடியில் பணிதலால் பற்றறும்` எனவும் கூட்டுக`. `நாதன் அடியில் பணிதலாகிய செயலில் நிற்றலே சாதனையில் நிற்றலாம்` என்பது உணர்த்துதற்கு அதனையும், அதற்கு மறுதலையானதையும் முதற்கண் எடுத்துக் கூறினார். உறுதல், இங்கு நீங்காது நிற்றல். மூன்று துரியம் `சீவ துரியம், சிவ துரியம், பர துரியம்` என்பன. இவை பற்றி அடுத்த தந்திரத்தில் காண்க.
இதனால், `சற்குருவை அடைந்து அவனால் ஆட்கொள்ளப் பெற்றோர் செயற்பாலன இவை` என்பது கூறப்பட்டது.