ஓம் நமசிவாய

ஏழாம் தந்திரம் - 35. சற்குரு நெறி

பதிகங்கள்

Photo

தானே எனநின்ற சற்குரு சந்நிதி
தானே எனநின்ற தன்மை வெளிப்படின்
தானே தனைப்பெற வேண்டும் சதுர்பெறல்
ஊனே எனநினைந் தோர்ந்துகொள் உன்னிலே.

English Meaning:
Holy Guru is Siva in Flesh

The Holy Guru
As Siva Himself stands;
In his presence
Jiva, his self-realization attains
If you, your self-realization seek,
Think of him, within,
As Siva in fleshy body.
Tamil Meaning:
`யான் சிவனே` என மாணாக்கற்கு அறிவுறுத்து கின்ற அந்தக் குருவின் சந்நிதியில் அவன் சிவனே ஆன தன்மை எவ்வாற்றா லேனும் மாணாக்கனுக்கு இனிது புலப்படுமாயின், அவனது மனித உடம்பைச் சிவனது அருள் திருமேனியாகவே உணர்ந்து, தான் அவனால் சிவமாந் தன்மையைப் பெறல் வேண்டும். (பின்னர் வேறு நினைத்தல் கூடாது.) இதனை உன் உள்ளத்திற்குள்ளே ஆராய்ந்து கொள்க.
Special Remark:
சிவமாம் தன்மை புலப்படுதல், அருணந்தி தேவர்க்கு மெய்கண்ட தேவர் நோக்கின மாத்திரத்தே மலச்செருக்கு முழுவதும் அற்றொழிய, உள்ளம் அனலிடை மெழுகு போல உருகப் பெற்றமை போல்வது. அதன் பின்னர் அவர் தம் ஆசிரியரை, ``கண்ணுதலும் கண்டக் கறையும் கரந்தருளி - மண்ணிடை`` (இருபா இருபஃது - குருவணக்கம்) வந்த சிவனாகவே உணர்ந்தமை அறிக. அதன் பின்னரும் வேறு நினைவாராயின் அவர் உய்யும் வழி இல்லை என்றபடி. ஆசிரியனது தன்மையை மாணவன் வெளிப்பட ஆராய்தல் கூடாமையின். ``உன்னிலே தேர்ந்துகொள்`` என்றார். இதனுள் `குரு` எனப் பொதுப்படக் கூறாது ``சற்குரு`` என்றது உணர்த்துவோனது சொற்பற்றி, சதுர்பெறல் - `அருள்உரு` எனப்படும் பெருமையை அடைதல். `ஊனே சதுர்பெறல் என நினைந்து தானே தனைப்பெறவேண்டும்` என்க.
இதனால், சற்குருவைத் தெளியுமாறு கூறப்பட்டது.