ஓம் நமசிவாய

ஏழாம் தந்திரம் - 36. கூடா ஒழுக்கம்

பதிகங்கள்

Photo

உயிரது நின்றால் உணர்வெங்கு மாகும்
அயரறி வில்லையால் ஆருடல் வீழும்
உயிரும் உடலும் ஒருங்கிக் கிடக்கும்
பயிரும் கிடந்துள்ளப் பாங்கறி யாரே.

English Meaning:
They Do Not Know the Inter-Relation of Body and Life

When life ebbs away,
Where the sensations are?
Sentience lost,
The body drops;
Life and body as one flourish
That state, they know not.
Tamil Meaning:
உயிர் உடம்பில் இருப்பதனால்தான் அந்த உடம்பு முழுதிலும் அறியுந்தன்மை காணப்படுகின்றது. (அத் தன்மையால் உடல் வீழ்ந்தொழியாது வாழ்ந்து செயற்படுகின்றது) உயிர் உடலை விட்டு நீங்கினால் உடலைச் செயற்படுத்துகின்ற அந்த அறிவு இல்லையாய்விடும். அறிவு இல்லையானால், வேறு எல்லா அமைப்புக்களும் நிறைந்துள்ள உடம்பு அவ்வமைப்பால் பயனின்றி வீழ்ந்து அழியும். ஆகவே `உயிர்` எனப்படுவது உடம்பிற்கு வேறாதல் தெளிவாகலின் அத்தகைய உயிரும் உடம்பும் ஒன்றி நிற்கும் பயப்பாடு வெள்ளிடை மலைபோல் விளங்கிக் கிடக்கவும் சிலர் உடம்பையே தாமாக மயங்கிக் கூடா ஒழுக்கத்தினை மேற்கொள்கின்றனர்.
Special Remark:
`இஃது ஓர் அறியாமை` என்பது குறிப்பெச்சம். ``நின்றால்`` என்றமையால், `நில்லாவிடில்` என்பது வருவிக்கப் பட்டது. அயர்தல் - செயலாற்றுதல்; விருந்தயர்தல், விழா வயர்தல் முதலியன காண்க பயிர் - `பயனைத் தருவது` என்னும் பொருட்டாய் நின்றது. ``கிடந்து`` என்னும் எச்சத்தைத் திரித்து, உம்மையை மாறிக் கூட்டி, ``கிடக்கவும்`` என உரைக்க. உள்ளம் - ஆன்மா. பாங்கு - அதன் தன்மை.
இதனால், `குருவருளால் தம்மையும், தலைவனையும் உணர்ந் தாராயினும் கூடா ஒழுக்கத்தைக் கொள்ளின் உணராதவரேயாவர்` என்பது கூறப்பட்டது.