ஓம் நமசிவாய

ஏழாம் தந்திரம் - 36. கூடா ஒழுக்கம்

பதிகங்கள்

Photo

காயக் குழப்பனைக் காயநன் னாடனைக்
காயத்தி னுள்ளே கமழ்கின்ற நந்தியைத்
தேயத்து ளேஎங்கும் தேடித் திரிவார்கள்
காயத்துள் நின்ற கருத்தறி யாரே.

English Meaning:
Look Inward

He who made this body-mix,
He who this body land holds,
He who within this body shines,
He is Nandi;
Him they seek and search is lands all;
They know not
He within the body stands.
Tamil Meaning:
காயக் குழப்பன் - உயிர்களின் உடம்புகளை அவற்றின் வினைக்கேற்ப உழல் விப்பவன். காயநன்னாடன் - உயிர்க்கு உயிராய் நிற்றலால் உயிர்களின் உடம்புகளைத் தனது இடமாக உடையவன். காயத்தினுள்ளே கமழ்தல் - ``உற்ற ஆக்கையின் உறுபொருளாய் நறுமலர் எழுதரு நாற்றம்போல்`` (தி.8 அதிசயப்பத்து, 9) உள்நோக்கி உணர்வார்க்கு நுண்ணிய இனிய பொருளாய் வெளிப்படுபவன்.
ஏனைய வெளிப்படை.
Special Remark:
`கருத்து அறியார் தேடித் திரிவர்கள்` என்பதன் பின், அவர்க்கு அது வேண்டுவதே` என்னும் குறிப்பெச்சம் வரு வித்துரைக்க. அதனானே, `கருத்தறிந்தார்க்கு அது வேண்டுவதின்று என்பது போந்தது போதரவே அவர் அங்ஙனம் திரியாமை அவர்க்குக் குற்றமாகாதாயிற்று. ஆகவே, அறியதார் அறிந்தார் போன்று ஒழுகுதல் கூடா ஒழுக்கம் ஆதல் அறிக.
இதனால், `கீழ் நிலையில் உள்ளோர் மேல்நிலையில் சென்றோர் போல ஒழுகுதல் கூடாது` என விலக்கப்பட்டது.