ஓம் நமசிவாய

ஏழாம் தந்திரம் - 36. கூடா ஒழுக்கம்

பதிகங்கள்

Photo

வடக்கு வடக்கென்பர் வைத்ததொன் றில்லை
நடக்க உறுவரே ஞானம் இலாதார்
வடக்கில் அடங்கிய வையகம் எல்லாம்
அகத்தில் அடங்கும் அறிவுடை யோர்க்கே.  

English Meaning:
Acquire True Jnana

``North, North`` they say;
Nothing there in the north is;
Northward they walk,
Of Jnana bereft;
All the world in the north,
Is in their heart contained,
For those that knowledge truly possess.
Tamil Meaning:
குருவருளைப் பெற்றபின்னும் இறைவனை எவ்விடத்தும் ஒருபெற்றியாகவே உணர்ந்து அவனது திருவருளில் மூழ்கி நிற்றலாகிய ஞானத்தில் ஞானமாம் அசைவிலா நிட்டை நிலையை எய்த மாட்டாதவரே அவனைக் காலம், இடம் முதலிய, சிறப்புக்கள் காரணமாக ஏகதேசமாக உணர்ந்து அவ்வாற்றான் வழிபடும் வழிபாடுகளை நிறைவேற்ற முயல்வர். மேற்கூறிய அந்த நிட்டை நிலையை எய்தினார்க்கு எவ்விடத்தும், எக்காலத்தும் இறை யருட் சிறப்பு அவரது ஞானத்தினுள்ளே இனிது விளங்கியே நிற்கும்.
Special Remark:
தமிழ் மக்கள் பொருட்டுத் தமிழ்நூல் செய்கின்றார் ஆகலானும், அம்மக்கட்கு இடம் தென்றிசை ஆகலானும், `அவர் வட திசையைச் சிவனது திருவருட்சிறப்பு இனிது விளங்கும் திசையாகக் கொண்டு முயன்று பயன்பெறும் மரபு நிலை அவருள் நிட்டை எய்தினோர்க்கு வேண்டா` என்றார். எனவே, `நிட்டை கூடப் பெறாது, ஏனைச் சிந்தித்தல் தெளிதல்களில் நின்றோர் அதனை இகழலாகாது` என்பதும் கூறினாராயிற்று. `வேண்டா` என்றது, `அவர் அது செய்யாமை குற்றம் அன்று` என்றபடி. இஃது இம் மந்திரத்தின் கருத்துரை. இதன் சொற்பொருள் வெளிப்படை. ``ஞானம்` என்றது ஞானத்தில் ஞானத்தை. ``அறிவு`` என்றதும் அதனையே. ஒன்று - ஒருசிறப்பு. `ஒன்றும்` என்னும் இழிவு சிறப்பும்மை தொகுத்தலாயிற்று. ``இல்லை`` என்றது பொதுமை நோக்காது உண்மை நோக்கிக் கூறியது. வையகம் - புண்ணியத் தலங்களும், தீர்த்தங்களும். ``அகத்தில்`` என்றது, `இருந்த இடத்தில்` என வேறொரு பொருளையும் தோற்றுவித்தது. ஈற்றடி உயிரெதுகையாயிற்று.
இதனால், `ஆவன இவை, ஆகாதன இவை` என்னும் வரை யறை அவற்றை மேற்கொள்வாரது நிலை பற்றியதாதல் கூறப்பட்டது.
ஏதேனும் காலமுமாம், ஏதேனும் தேசமுமாம்;
ஏதேனும் திக்கா சனமுமாம் - ஏதேனும்
செய்வான் ஒருவனுமாம்; செய்யாச் செயலதனைச்
செய்யாமை செய்யும் பொழுது.
-திருக்களிற்றுப்படியார் - 60.
எனவும்,
``தேசம் இடம் காலம்திக் (கு) ஆசனங்கள் இன்றிச்
செய்வதொன்று போற்செய்யாச் செயலதனைச் செய்து``
-சிவஞானசித்தியார், சுபக்கம், 285
எனவும் வரும் சாத்திர மொழிகளையும் காண்க.