ஓம் நமசிவாய

ஏழாம் தந்திரம் - 36. கூடா ஒழுக்கம்

பதிகங்கள்

Photo

பத்திவிற் றுண்டு பகலைக் கழிவிடும்
மத்தகர்க் கன்றோ மறுபிறப் புள்ளது
வித்துக்குற் றுண்டு விளைபுலம் பாழ்செய்யும்
பித்தர்கட் கென்றும் பிறப்பில்லை தானே.

English Meaning:
Conserve Bindu

They sell the Love of God,
They make a daily business of it;
Pride-filled are they,
They in birth`s whirl will be;
They who pound the Seed (Bindu) and consume
Lay waste the body-land;
But, verily, for the God-mad,
Forever no birth will be.
Tamil Meaning:
சற்குரு அருளால் ஞானம் பெற்றவர்கட்கும் மறு பிறப்பு உண்டு` எனக் கூறுதல் அதன் பின்பும் பத்திச் செய்கைகளைத் தமக்கு விருப்பமின்றி உலகத்தார் பாராட்டுதற் பொருட்டே செய்து அதனால் புகழும் பொருளும் பெற்றுக் காலத்தைக் கழிக்கின்ற அந்தப் பித்தர்களுக்கேயாம். அவ்வாறின்றிப் புகழ் பொருள் முதலியவற்றுள் ஒன்றையும் விரும்பாது பத்திச் செய்கைகளைத் தமது அன்பானே செய்து ஒழுகுமாற்றால் மறுபிறப்பாகிய பயிருக்கு வித்தாய் அமைகின்ற ஆகாமிய வினையை வித்தைக் குற்றியுண்பார்போல வலுத்து நில்லாதபடி அழித்து, மறுபிறப்பாகிய பயிர் விளைக்கின்ற நெறியைப் பாழாய்க் கிடக்கும்படி செய்கின்ற அந்தப் பித்தர்களுக்கு ஒருஞானறும் மறுபிறப்பு உண்டாதல் இல்லை.
Special Remark:
``ஞானத்திற்கு உலகம் பேய்; உலகத்திற்கு ஞானம் பேய்`` என்பது ஒரு பழமொழி. அதன்படிஞானிகளும், அஞ் ஞானிகளும் ஒருவரையொருவர் பேய் பிடியுண்டவர்களாக, அல்லது பித்தர்களாகக் கருதுதல் தெளிவு. அம்முறையில் இம்மந்திரத்தில் இருவகைப் பித்தர்களைக் குறிப்பிட்டு, ஒருவகைப் பித்தர்கட்கு மறு பிறப்பு உண்டாதலையும் மற்றொருவகைப் பித்தர்கட்கு மறுபிறப்பு உண்டாகாமையையும் வலியுறுத்தினார், ``பெரும்பித்தர் கூடிப் பிதற்றும் அடி`` (தி.6 ப.6 பா.4) எனமறுபிறப்பில்லாத பித்தரை, ``பெரும் பித்தர்`` என அருளிச் செய்தமை அறிக.
``தென்பாலுகந்தாடும் தில்லைச்சிற் றம்பலவன்
பெண்பா லுகந்தான்; பெரும்பித்தன் காணேடி``
-தி.8 திருச்சாழல் 9
எனப்பட்ட அந்தப் பெரும்பித்தனுக்கு ஆட்பட்டோர் தாமும் பெரும் பித்தர் ஆதலல்லது, வேறு என் ஆவர்? `கழிய` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. மத்தகர் - மத்தச் செயலைச் செய்பவர். மத்தம் - உன்மத்தம்; பித்து. ``அன்றோ`` என்றது தேற்றமாதல் குறித்தது. ``வித்துக்குற் றுண்டு விளைபுலம் பாழ்செய்யும்`` என்றது ஒட்டணி.
இதனால், `ஞானம் பெற்றோர் அந்நெறியில் உறைத்து நின்று நிட்டை கூடாது, கூடாஒழுக்கம் உடையராயின் ஞானம் பெறாதவ ரோடு ஒத்தவரேயாவர்` என்பது கூறப்பட்டது.