ஓம் நமசிவாய

ஏழாம் தந்திரம் - 36. கூடா ஒழுக்கம்

பதிகங்கள்

Photo

கண்காணி இல்லென்று கள்ளம் பல செய்வார்
கண்காணி இல்லா இடம்இல்லை காணுங்கால்
கண்காணி யாகக் கலந்தெங்கும் நின்றானைக்
கண்காணி கண்டார் களவொழிந் தாரே.

English Meaning:
God is Omniscient

Thinking there is none that oversees
They many evil deeds perform;
None the place, in fact,
Where the over-seer is not;
The Lord pervades all, overseeing all;
They who the Over-seer saw,
Abandoned evil deeds all.

Tamil Meaning:
அறிவில்லாதவர் `தங்களை உடன் இருந்து காவல் புரிபவன் எவனும் இல்லை` என்று தவறாகக் கருதிக் கொண்டு தவறான செயல்கள் பலவற்றைச் செய்கின்றனர். உண்மையை உணர்ந்தால் யாவரையும் உடன் இருந்து காவல் புரிகின்ற ஒருவன் எங்கும் இருக்கின்றான். அவன் இல்லாத இடம் இல்லை. (எனவே தவறு செய்பவர் அவனால் ஒறுக்கப்படுதல் திண்ணம்) எவ்விடத்திலும் நிறைந்து காவல் புரிகின்ற அவனை அங்ஙனம் காவல் புரிபவனாக அறிந்தோர் யாவரும் தவற்றை ஒரு ஞான்றும் செய்யாது ஒழிந்திருக்கின்றனர்.
Special Remark:
`அவரைப் பின்பற்றி ஒழுகுதலே அறிவுடைமை யாகும்` என்பது குறிப்பெச்சம். இம்மந்திரப் பொருளையே,
வஞ்சித் தொழுகும் மதியிலிகாள், யாவரையும்
வஞ்சித்தோம் என்றுமகிழன்மின் - வஞ்சித்த
எங்கும் உளன்ஒருவன் காணுங்கொ லென்றஞ்சி
அங்கங் குலைவ தறிவு. -நீதிநெறி விளக்கம் - 93.
எனப் பின்வந்த பெரியார் ஞானப் பகுதியில் எடுத்தருளிச் செய்தார். மெய்கண்ட தேவரும்.
தன்னை யறிவித்துத் தான்தானாச் செய்தானைப்
பின்னை மறத்தல் பிழையலது. -சிவஞானபோதம் சூ. 12- அதி, 4
என ஞானியரை நோக்கியே அறிவுறுத்தமை காண்க. ``கண்காணி`` என்பது நேரே நோக்கிக் காவல் புரிபவனைக் குறிக்கும் பெயர். ``ஆக`` என்பதைப் பின்னரும் கூட்டுக.
இதனால், `ஞானியர் தாம் அறிந்து மேற்கொள்ளும் கூடா ஒழுக்கத்தை இறைவன் பொறான்` என்பது கூறப்பட்டது.