ஓம் நமசிவாய

ஏழாம் தந்திரம் - 36. கூடா ஒழுக்கம்

பதிகங்கள்

Photo

பித்தன் மருந்தால் தெளிந்து பிரகிருதி
உய்த்தொன்று மாபோல் விழியுந்தன்கண்ணொளி
அத்தன்மை யாதல்போல் நந்தி அருள்தரச்
சித்தம் தெளிந்தேன் செயலொழிந் தேனே.

English Meaning:
By His Grace Our Thoughts Become Serene

Even as
The lunatic by medicine administered
Lucid becometh,
And his true self realizeth;
Even as,
The eye its sight regains,
So, too,
Nandi bestowing His Grace on me
Serene my thoughts became,
To actionless state heightened.
Tamil Meaning:
பித்துக் கொண்டவன் அதற்காக மருத்துவன் தரும் மருந்தால் பித்து நீங்கித் தெளிவுற்று உடம்பை முன்போலத் தறிகெட்ட நிலையில் செலுத்திக் கெடுக்காமல் இயற்கை நிலையில் செலுத்தி ஏனையோர் குழாத்தில் தானும் ஒருவனாய் ஒன்றுபடுதலைப் போலவும், படலத்தால் மறைக்கப்பட்ட கண்ணும் அவ்வாறே மருத்துவன் செய்யும் சிகிச்சையால் படலம் நீங்கித் தனது ஒளி கிடைக்கப் பெறும் அத்தன்மையைப் போலவும் அஞ்ஞானத்தால் அறிவு மயங்கி, `யான், எனது` எனச் செருக்கித் திரிந்த யான் எம் ஆசிரியாராகிய நந்திபெருமான் ஞானத்தை அருளியதனால் அறிவு தெளிந்து செருக்கொழிந்து அருள் வழியில் ஒழுகி ஏனைய அருளாளரது குழாத்தில் சேர்ந்து அவர்களில் ஒருவன் ஆயினேன்.
Special Remark:
`அதனால் யான்எனது என்னும் செருக்கால் கூடா ஒழுக்கத்தை மேற்கொள்ளுதலை இலன் ஆயினேன்` என்பது குறிப் பெச்சம். `ஆகவே, இப்பேற்றினைப் பெறாதவர் கூடாவொழுக்கத்தை ஒழிதல் இயலாது` என்பது கருத்தாயிற்று, உவமையில், `பிரகிருதி உய்த்து ஒன்றுமாபோல்`` எனக் கூறினமையால், பொருளிலும் அதற்கு ஏற்புடையன கொள்ளப்பட்டன. ``பிரகிருதி`` என்றது உடம்பை; சிவஞான போதத்திலும் (சூ. 3 அதி.5), ``ஒடுங்கினவிடத்து இன்பத்துன்பம் சீவனம் பிரகிருதிக் கின்மையின்`` என உடம்பு ``பிரகிருதி`` என்றது காண்க.
இதனால், `தற்போதத்தால் கூடா ஒழுக்கத்தைக் கொள்ளு தற்குக் காரணம் திருவருளின்மையே` என்பது கூறப்பட்டது.