ஓம் நமசிவாய

ஏழாம் தந்திரம் - 36. கூடா ஒழுக்கம்

பதிகங்கள்

Photo

கண்காணி யாகவே கையகத்தே எழும்
கண்காணி யாகக் கருத்துள் இருந்திடும்
கண்காணி யாகக் கலந்து வழிசெய்யும்
கண்காணி யாகிய காதலன் றானே.

English Meaning:
Lord Oversees From Within You

Visible to your eyes,
He rises in your very palm;
Over-seeing All,
He in your thoughts stands;
As light within the eyes,
He guides your way;
He is Love Embodied,
That Oversees you ever.
Tamil Meaning:
உயிர்களின் கண்ணைத் தன் இடமாகக் கொண்டு அவற்றிற்கு அக்கண்போலச் சிறந்து நிற்கின்ற இறைவன் ஞானிகட்கு அவர்தம் புறக் கண்ணிற்குப் புலனாகின்றவனாகியும் இனிது விளங்கு வான்.அகக்கண்ணிற்குப் புலனாகின்றவனாகியும் இனிது விளங்கு வான். ஆகையால் அவர்களது செயல்திறங்களை இடைவிடாது நோக்கி அவற்றிற்கு ஏற்ற பயனை அருளுதல் அவனுக்கு இயல்பாகும்.
Special Remark:
``காணி`` நான்கனுள் முன்னைய மூன்றும் பகுபதம்; இறுதி ஒன்றும் பகாப்பதம். பகுபதங்களில் வந்த இகர விகுதி மூன்றனுள் முன்னைய இரண்டிலும் செயப்படுபொருண்மையிலும், இறுதி ஒன்றும் வினைமுதற் பொருண்மையிலும் வந்தன. காணி - தனக்குரிய இடம். காணி உடையவனை, ``காணி`` என உபசரித்துக் கூறினார். `உயிர் தனது வலக்கண்ணில் சிறந்து விளங்கும்` என்றும் `அவ்விளக்கத்தில் இறைவனும் சிறந்து விளங்குவான்` என்றும் கூறும் உபநிடத வழக்குப் பற்றி(பிருகதாரணியம், அத்தியாயம் 5) இறைவனை, ``கண்காணியாகிய காதலன்`` என்றார். ``கண்ணே! கண்ணிற் கருமணியே! மணியாடுபாவாய்`` (தி.6 ப.47 பா.1) என்னும் திருத்தாண்டகமும் இங்கு நோக்கத் தக்கது. ஈற்றடியை முதலில் கூட்டியுரைக்க. புறத்து விளங்குதலை, `கையகத்தே எழும்` என்றும் அகத்து விளங்குதலை ``கருத்துள் இருந்திடும்`` என்றும் கூறினார். வழி - தீரும் வாயில். ஞானியர் தற்போதம் நிகழ்ந்து செய்யின் அவற்றை அவர் செயலாகவும், தற்போதம் இழந்து செய்யின் அவற்றைத் தன் செயலாகவும் கொண்டு அவற்றிற்கு ஏற்ற பயனைத் தருதலையே இங்கு, ``வழி செய்யும்`` என்றார்.
இதனால், `ஞானியரும் தற்போதம் நீங்காநிலையில் அற நெறிபிழைப்பாராயின் அஃது அவர்க்கு ஏனையோர்க்குப் போலவே கூடா ஒழுக்கமாம்` என்பது கூறப்பட்டது.