ஓம் நமசிவாய

ஏழாம் தந்திரம் - 36. கூடா ஒழுக்கம்

பதிகங்கள்

Photo

பிரான்மய மாகப் பெயர்ந்தன எட்டும்
பராமய மென்றெண்ணிப் பள்ளி உணரார்
சுராமய முன்னிய சூழ்வினை யாளர்
நிராமய மாக நினைப் பொழிந் தாரே.

English Meaning:
Unholy Men Do Not Think of Attaining Divinity

The directions eight moved,
The Lord pervading them all;
Of this, His Omnipresence, they think not;
From their stupor they wake not;
Drunk are they in their Karmas inebriate;
Lo! all thoughts of Divinity-Becoming
They, forever, abandoned.
Tamil Meaning:
கள்ளை மிக உண்டலால் உடல் அக்கள்மயமே யாய் இருத்தலை விரும்பும் வஞ்சமனத்தவர் ஞானிகட்குச் சிவமயமாகத் திகழ்கின்ற உலகப் பகுதி எட்டினையும் அருள்மயமாக எண்ணி அடங்குதலாகிய ஞானவிழிப்பைக் கொள்ளாது அஞ் ஞானத்தில் உறங்குவோராய்த் தாம் குற்றம் சிறிதும் இல்லாத தூயராய் இருத்தல் வேண்டும் என்பதைச் சிறிதும் நினையாதே கெடுகின்றனர்.
Special Remark:
மூன்றாம் அடியை முதலில் வைத்துரைக்க. பெயர்தல் - விளங்குதல். உலகப் பகுதி ஐம்பெரும் பூதமும், `ஞாயிறு திங்கள்` என்னும் இருசுடர்களும், உயிர்களும் எட்டுப் பகுதியுள்ளே அடங்குதலின், ``எட்டும்`` என முற்றும்மை கொடுத்து ஓதினார். உடலை உயிர் இயக்குதல்போல் இவற்றை இறைவன் இயக்கி நிற்றலின் இந்த எட்டும் அவனுக்குத் திருமேனிகளாகச் சொல்லப் படுதல் பற்றி இவற்றை, ``பிரான் மயமாகப் பெயர்ந்தன`` எனவும், அதனானே அவை அருள்மயம் ஆதல் பற்றி, `பராமயம் என்றெண்ணி உணரார்`` எனவும் கூறினார். பரா - பரை; சத்தி; அருள். ``உணரார்`` என்பது முற்றெச்சம். நிராமயம் - நோய் இன்மை; அஃது இங்குக் குற்றம் இன்மையைக் குறித்தது. நிராமயம் ஆகும்படி நினைத்தலை ஒழிந்தனர்` என்க. இது ஞானிகட்கு ஆகாமைபற்றி இவ்வாறான நிலையில் நிற்பவர்கள் ஞானத்தில் விழியாது அஞ்ஞானத்தில் உறங்குபவராகவே கூறினார். கள்ளால் களிப்பெய்தினார் நன்று தீது அறியாது மயங்கிக் கெடுவர் ஆதலின், கள்ளுண்டல் மற்றும் பலகுற்றங்கள் விளைதற்கு வழியாகும் என்பது கருத்து.
இதனால், `கள்ளுண்பார் ஞானியராகாது அஞ்ஞானியரே யாவர்` என்பது கூறப்பட்டது.