ஓம் நமசிவாய

ஏழாம் தந்திரம் - 36. கூடா ஒழுக்கம்

பதிகங்கள்

Photo

செய்தான் அறியும் செழுங்கடல் வட்டத்துப்
பொய்தான் மிகவும் புலம்பும் மனிதர்கள்
மெய்தான் உரைக்கில்விண் ணோர்தொழச் செய்குவன்
மைதாழ்ந் திலங்கு மிடறுடை யோனே.  

English Meaning:
Speak Truth

He who this sea-girt world created
He knows all;
Men falsehoods many utter,
Let them the Truth speak;
He will make Celestials revere them
—He, that is of the lustrous dark throat.
Tamil Meaning:
`செழுங்கடல் வட்டத்து நிகழ்வனவற்றை அவற்றைச் செய்தான் அறியும்` எனக் கூட்டுக.
ஏனைய வெளிப்படை.
Special Remark:
`நிகழ்வனவற்றை` என்பது சொல்லெச்சம். பொய்யினது இழிவைப் புலப்படுத்தற்கு, `பேசும் மனிதர்கள்` என்னாது, ``புலம்பும் மனிதர்கள்`` என்றார். ``செய்தான்`` என்றது, `எதன் பொருட்டுப் படைத்தானோ அதன் பொருட்டாகவே ஒழுகு வோரையும் அவ்வாறின்றி யொழுகுவோரையும் அவன் நோக்கி யிருந்து அவரவர்க்குத் தக்க பயனைத் தருவான்` என்னும் குறிப்பினது. பின்னர், ``மைதாழ்ந்திலங்கு மிடறுடையோன்`` என்றமையால், முன்னர், ``செய்தான்`` என்றதும் அவனையேயாயிற்று. `நல் லொழுக்கத்தினாலே நற்பயன் பெறுதல் கூடுவதாய் இருக்க அதனை விடுத்துத் தீயொழுக்கத்தில் ஒழுகுதல் அறியாமை` என்பது கருத்து. மெய்யுரைப்பார்க்குச் சுவர்க்கத்தைத் தருதல் கூறுமுகத்தால் பொய்யுரைப்பார்க்கு நரகத்தைத் தருதல் உணர்த்தப்பட்டது.
இதனால், `ஞான நெறியில் நிற்பார்க்குப் பொய்யுரைத்தல் சிறிதும் ஆகாது` என்பது கூறப்பட்டது.