ஓம் நமசிவாய

ஐந்தாம் தந்திரம் - 16. சத்திநிபாதம்

பதிகங்கள்

Photo

மாலை விளக்கும் மதியமும்ஞாயிறும்
சால விளக்கும் தனிச்சுடர் அண்ணல் உள்
ஞானம் விளக்கிய நாதன்என் னுள்புகுந்
தூனை விளக்கி உடனிருந் தானே.

English Meaning:
Inner Light of Grace

He is the Sun and the Moon
That dispels darkness;
He is the Light on the path,
The Peerless Flame, the Supreme Lord;
The Master that illumined the Light within me;
He entered in me and lighted up the corporeal body;
And then, aye, with me bided for ever and ever.
Tamil Meaning:
என்னுள் விளங்காது மறைந்து கிடைந்த ஞானத்தை அம்மறைவு நீக்கி விளங்கி எழச்செய்த என் குருநாதன் `மாலை, இரவு, பகல்` ஆகியவற்றில் ஒரோவொரு காலத்தில் விளக்கத்தைத் தருகின்ற `விளக்கு, சந்திரன், சூரியன்,` என்னும் ஒளிகளுக்கும் ஒளியைத் தருகின்ற ஒப்பற்றபேரொளி` அவன் என் உள்ளே புகுந்து உயிரை மட்டுமின்றி உடலையும் ஒளியாய் விளங்கச் செய்து, பின் என்னைவிட்டு அகலாது உடனாயே இருக்கின்றான்.
Special Remark:
விளக்கு விளக்கந்தரும் காலத்தைக்கூறவே, ஏனை இரண்டும் விளக்கந்தரும் காலத்தையும் எடுத்துக்கூறுதல் கருத்தா யிற்று. `விளக்கு முதலிய மூன்றும் காலத்தாலும், இடத்தாலும் வரை யறுக்கப்படும் ஒளிகள்` என்பதை எடுத்தோதி, `அவற்றுக்கும் விளக்கம் தரும் ஒளி` எனவும், `ஒப்பற்றது` எனவும் கூறியவற்றால் அக இருளாகிய அஞ்ஞானத்தைப் போக்கி, மெய்ஞ்ஞான ஒளியாய் விளங்குதலும், அது பிறிதொன்றால் ஆகாமையும் குறிக்கப்பட்டன, மாயையும் கன்மமும் ஆன்மா மருள்நிலையில் உள்ளபொழுது மருளாயும், அருள்நிலையை எய்தியபொழுது அருளாயும் நிற்கும் இயல்புடையனவாதல் பற்றி, `ஊனையும் விளக்கினான்` என்றார். மாயையும், கன்மமும் இவ்வியல்பின் ஆதலை,
``மாயைமா யேயம் மாயா வரும் இரு வினையின் வாய்மை
ஆயஆ ருயிரின்மேவும் மருளெனில் இருளாய் நிற்கும்;
மாயைமா யேயம் மாயா வரும்இரு வினையின் வாய்மை
ஆயஆ ருயிரின் மேவும் அருளெனில் ஒளியாய் நிற்கும்`` 1
என்னும் `சிவப்பிரகாசத்தால்` அறிக. `தீவிரதர சத்தநிபாதத்தால் அனுபவ ஞானமாகிய நிட்டை கைவந்து, ஆன்மா சிவமாம் தன்மையைப் பெறும்` என்றவாறு. சிவாக்கிர யோகிகளும் இங்கு சத்தி சாந்தியாய்ப்பதிந்து, உபசாந்தத்தைத்தரும் என்றார். இப்பாட்டு இருவிகற்பம் பெற்றது.
இதனால், சத்திநிபாதத்தின் நிறைந்த இயல்பும், பயனும் கூறப்பட்டன.